சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரே திமுக நபர் மரணம்: முக ஸ்டாலின் இரங்கல்

 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரே திமுக நபர் மரணம்: முக ஸ்டாலின் இரங்கல்

சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் ஒரே திமுக நபராக அறியப்பட்ட பாடலூர் விஜய் மரணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்

சென்னை: சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் ஒரே திமுக நபராக அறியப்பட்ட பாடலூர் விஜய் மரணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக சமூகவலைத்தளங்கள் திகழ்கின்றன  என்பது மறுக்க முடியாத உண்மை. இப்பொழுது உடனுக்கு உடன் செய்திகளையும் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடிகின்றது. ஒவ்வொருவரும், இதில் செய்தி சேகரிப்பவராகவும் செய்தியினை கொண்டு செல்பவராகவும் செயல்படுகின்றனர். சிலர் போலியான உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பினாலும் சமூக வலைதளங்களின் பயன்பாடு அளப்பரியது.

அரசியல் கட்சிகளும், தலைவர்களும் சமூக வலைத்தளத்துக்குள் நுழைந்து பிரசாரங்களை வலுப்படுத்த தொடங்கியுள்ளனர். கடந்த மக்களவை தேர்தலில் பாஜக ஆட்சிக் கட்டிலில் ஏற முக்கிய பங்கு வகித்தது சமூக வலைதளங்களே. இதையடுத்து, சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளின் நுழைவு அதிகமாக இருந்தது.

தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் சமூக வலைத்தளங்களை தங்களது பிரதான பிரசார தளமாக உபயோகித்து வருகின்றனர். அதிமுக ஐடி விங், திமுக ஐடி விங் என அணைத்து கட்சிகளும் தங்களுக்கென தனி ஐடி விங்கை வைத்துள்ளனர்.

திமுக-வை பொறுத்தவரை ஐடி விங்-குகள் இருந்தாலும் அது பல்வேறு சமயங்களில் ஆக்டிவாக இருப்பதில்லை. அதனை ஈடுகட்டும் வகையில், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்தவர் பாடலூர் விஜய். மாற்றுத்திறனாளியான இவர் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். திமுக-வில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் ஒரே நபர் என்றால் இவரை பலரும் கை கட்டுவர்.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடலூர் விஜய், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சமூக வலைதளத்தில் கழகத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்தவர் பாடலூர் விஜய். மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், தன்னால் இயன்றவரை கழகப் பணியாற்றிய விஜய்யின் மரணச் செய்தியறிந்து கண் கலங்கினேன்! உண்மைத் தொண்டரை இழந்திருக்கிறோம்! கழகத் தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.