சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை: தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் & புகைப்படங்கள் வெளியீடு!
துப்பாக்கி குண்டுகள் வில்சனின் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்திருப்பது தெரியவந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக – கேரள எல்லையின் களியக்காவிளை பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் வில்சன். இவர் நேற்று வழக்கம் போல பணியிலிருந்த நிலையில், இரவு 9.45 மணியளவில் அப்பகுதி வழியாக நடந்து வந்த இரண்டு இளைஞர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி குண்டுகள் வில்சனின் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்திருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு அம்மாவட்ட ஆட்சியர் மு வடநேரே நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இளைஞர்கள் இருவர் வில்சனை சுட்டுவிட்டு பள்ளிவாசல் வழியாக தப்பிச்சென்றது தெரிந்தது.
இந்நிலையில் இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவுபீக், ஷமீம் ஆகிய இரண்டு பேர் வில்சனை சுட்டுக்கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இருவருக்கும் தீவிரவாத இயக்கங்கள் உடன் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், வில்சனை கொன்றவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என்றும் அவரது வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என்றும் அறிவித்துள்ளார்.