சப்-இன்ஸ்பெக்டர் கொலை: துப்புக்கொடுத்தால் லட்சக்கணக்கில் சன்மானம்!
அம்மாவட்ட ஆட்சியர் மு வடநேரே, டிஜிபி திரிபாதி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக – கேரள எல்லையின் களியக்காவிளை பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் வில்சன். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல பணியிலிருந்த நிலையில், இரவு 9.45 மணியளவில் அப்பகுதி வழியாக நடந்து வந்த இரண்டு இளைஞர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதுகுறித்து நடத்திய விசாரணையில் துப்பாக்கி குண்டுகள் வில்சனின் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்திருப்பது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு அம்மாவட்ட ஆட்சியர் மு வடநேரே, டிஜிபி திரிபாதி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
இதை தொடர்ந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவுபீக், ஷமீம் என்ற இளைஞர்கள் இருவர் வில்சனை சுட்டுவிட்டு பள்ளிவாசல் வழியாக தப்பிச்சென்றது தெரிந்தது. கொலையாளிகள் பயன்படுத்தியது 7.65 எம்.எம். ரக கள்ளத் துப்பாக்கி ஆகும். இதனிடையே வில்சனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு 21 குண்டுகள் முழங்க நேற்று அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
வில்சனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் , அவர் உடலில் குண்டுகள் பாய்ந்ததோடு, கத்தியால் இடுப்பு பகுதியில் குத்தப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதனால் தப்பியோடிய இருவரையும் தமிழ்நாடு மற்றும் கேரள போலீசார் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இருவரில் ஒருவரது வீட்டில் அண்மையில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது என்றும் போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில் வில்சன் கொலைக் குற்றவாளிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று கன்னியாகுமரி போலீசார் தெரிவித்துள்ளனர். கேரள மாநில டிஜிபி லோக்நாத், குற்றவாளிகளைப் பிடித்துக் கொடுத்தால் இருவரது தலைக்கும் தலா ரூ.5 லட்சம் என 10 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.