சபரிமலை வழக்கில் இன்று தீர்ப்பு: பெண்களுக்கான தடை நீங்குமா? கேரளாவில் உச்சக்கட்ட பாதுகாப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 41 நாள் கடும் விரதம் இருந்து இருமுடி சுமந்துவரும் ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்களுக்கு அனுமதியில்லை.நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு செய்யலாம் என்று கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
இருப்பினும் இந்த தீர்ப்பால் கேரளாவில் பதற்றம் ஏற்பட்டது. இந்து மத அமைப்புகள், பாஜகவினரும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்களை நுழைய விடாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அந்த தீர்ப்புக்கு எதிராக 65 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட 65 சீராய்வு மனுக்கள் மீதான வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் வழங்கவுள்ளது. இந்த அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய தலைமையில், நீதிபதிகள் ரோஹிண்டன் நரிமன், ஏ எம் கன்வில்கர், டிஒய் சந்திரசூட், மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.