சபரிமலை கோயிலுக்குள் பெண்கள்: கேரள அரசின் தகவலால் மீண்டும் சர்ச்சை

 

சபரிமலை கோயிலுக்குள் பெண்கள்: கேரள அரசின் தகவலால் மீண்டும் சர்ச்சை

சபரிமலை கோயிலுக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம்: சபரிமலை கோயிலுக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சபரிமலை கோயிலுக்குள் இதுவரை 51 பெண்கள் சென்றதாக கூறி பிரமாண பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார். கேரள அரசின் சார்பில் இப்போது தான் முதல் முறையாக 10-50 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் 51 பேர் சபரிமலை கோயிலுக்கு சென்றதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

supreme
 
இது தொடர்பாக சபரிமலை தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், “இதுவரை 7,564 பெண்கள் சபரிமலை கோயிலுக்கு செல்ல ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் வரிசைப்படி 51 பெண்கள் கோயிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் சன்னிதானத்தை அடைந்தார்களா? வழிபட்டார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது” என மேலோட்டமாகப் பதிலளித்துள்ளார்.

இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில், கேரள அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்துக்கு பாஜக, காங்கிரஸ், சபரிமலை கர்மா சமிதி, பந்தளம் அரண்மனை குடும்பம் ஆகியவை கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை கூறுகையில், “இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பொய் இது. உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பொய் தகவலை கூறியதுடன், மக்களை முட்டாளாக்க நினைக்கிறார்கள்” என கூறியுள்ளார். இதனையடுத்து, கேரள அரசியலில் மீண்டும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.