சபரிமலை ஐயப்பன் கோயில் விருச்சிக மாத பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது

 

சபரிமலை ஐயப்பன் கோயில் விருச்சிக மாத பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் விருச்சிக மாத பூஜைக்காகவும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி கோயில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.

sabarimalai

மண்டல பூஜையின் தொடக்கமாக 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் நெருப்பு வைத்து தீ மூட்டப்பட்டது. தொடர்ந்து, புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடந்தது. 

முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வி.என்.வாசுதேவன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோயில் மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.என்.நாராயணன் நம்பூதிரி ஆகியோர் இருமுடி கட்டுடன் 18 படிகளுக்குகீழ் மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டனர்.

அதனை  தொடர்ந்து புதிய மேல்சாந்திகள், தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றுக்கொண்டனர்.

அதன் பின்னர் அவர்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.

sabarimalaijk

நேற்று மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.பக்தர்களின் தரிசனத்திற்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோயில் சாவி புதிய மேல் சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 4 மணிக்கு,புதிய மேல்சாந்தி வி.என்.வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார். டிசம்பர் மாதம் 27-ந் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.

பக்தர்களின் வருகை அதிகமானால், தரிசனத்திற்கு வசதியாக கோயில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.