சபரிமலையில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி

 

சபரிமலையில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி

திருவனந்தபுரம்: சபரிமலையில் இருக்கும் பம்பையில் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சபரிலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று திறக்கப்பட இருக்கிறது. இதனால் பெண்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக பலத்த காவல்துறை பாதுகாப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படியே இன்று 3 பெண்கள் சபரிமலைக்கு வந்தனர். ஆனால் அவர்களை கோயிலுக்கு செல்லவிடாமல் பம்பையில்  ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். இருப்பினும் மாதவி என்ற ஒரு பெண்ணை பத்திரமாக மீட்டு காவல்துறையினர் கோயிலுக்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து சபரிமலை கோயிலுக்கு செல்ல வேண்டாம் என பக்தர்கள் காலில் விழுந்து நூதன முறையில் போராடினர். மேலும் பெண் டாக்டர்களையும் போராட்டக்காரர்கள் பம்பையில் தடுத்து நிறுத்தினர். அவர்களின் வயது குறித்து அறிந்த பிறகே அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதற்கிடையே பெண் பத்திர்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கேரள மாநிலம் நிலக்கலில் போராட்டம் நடத்திய ஐயப்ப பக்தர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். அப்போது பக்தர்கள்  கல்வீசி தாக்குதல் நடத்தியதில் ஒரு பெண் படுகாயமடைந்தார். இதற்கிடையே போராட்டக்காரர்களை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடியாததால் கமேண்டோ படை சபரிமலைக்கு விரைந்தது. இதனையடுத்து  இதுபோன்ற பதற்றமான சூழலில் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.