சபரிமலைக்குள் நுழையும் பெண்களை இரு துண்டுகளாக வெட்டுங்கள்: மலையாள நடிகரின் சர்ச்சை கருத்து!
சபரிமலைக்குள் நுழையும் பெண்களை இரு துண்டுகளாக வெட்ட வேண்டும் என்று கேரள நடிகரும் பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா: சபரிமலைக்குள் நுழையும் பெண்களை இரு துண்டுகளாக வெட்ட வேண்டும் என்று கேரள நடிகரும் பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவில் உள்ளது. அய்யப்பன் நித்திய பிரம்மச்சாரி என்பதால் இவரை 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து இந்திய இளம் வக்கீல்கள் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் அனைத்துத் தரப்பு பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியது.
தீர்ப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கேரளாவில் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அதில் கலந்துகொண்ட கேரள நடிகரும் பாஜக ஆதரவாளருமான கொல்லம் துளசி, ‘’சபரிமலைக்குள் நுழையும் பெண்களை இரு துண்டுகளாக வெட்ட வேண்டும். ஒரு பாதியை டெல்லிக்கும் மற்றொரு பாதியை திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்துக்கும் அனுப்ப வேண்டும். இங்கு எழுப்பப்படும் ஐயப்ப சரண கோஷம் பினராயி விஜயனின் காதுகளை எட்ட வேண்டும்’’ என்று கூறினார்.
சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, கொல்லம் துளசி இவ்வாறு கூறியுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.