சந்திரனின் சாபத்தை நீக்கிய கார்த்திகை சோமவார விரதம்!    

 

சந்திரனின் சாபத்தை நீக்கிய கார்த்திகை சோமவார விரதம்!    

கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் இருந்தாலும், அவற்றில் சிறப்பான விரதமாக கடைப்பிடிக்கப்படுவது கார்த்திகை சோமவார விரதமாகும். இந்த விரதம் ஈசனின் அருளைப் பெற சிறந்த வழியை ஏற்படுத்தித் தரும். திங்கட்கிழமை என்பது சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானை நினைத்து திங்கட்கிழமைகளில் மேற்கொள்ளப்படும் விரதம் என்பதால் சோமவார விரதம் என்று பெயர் பெற்றது. இந்த விரதத்தை கார்த்திகை முதல் சோமவாரத்தில் இருந்து சோமவாரம் அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதத்தை ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் அனுஷ்டிப்பது சிறப்புக்குரியதாகும்.  

சோமவார விரதம்

சந்திரன் தோன்றியது கார்த்திகை மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில் தான். அவன் பெரியவன் ஆனதும், ராஜசூய வேள்வி ஒன்றை நடத்தி, பெரும் புகழை அடைந்தான். சந்திரனுக்கு இருக்கும் புகழை அறிந்த தட்சன், தனது 27 பெண்களையும் சந்திரனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். ஆனால் சந்திரன், 27 பேரில் ரோகிணியிடம் மட்டும் அதிக அன்பு காட்டி வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் பெரும் கவலையடைந்தனர். தங்களின் வருத்தத்தை தந்தையான தட்சனிடமும் கூறினார்கள். பெண்களின் வருத்தத்தை அறிந்த தட்சன், சந்திரனை வரவழைத்து, ‘அனைத்து பெண்களிடமும் அன்பாக இரு’ என்று கூறினான். ஆனால் அதன்பிறகும்கூட சந்திரனிடம் மாற்றம் இல்லை. ரோகிணியிடம் மட்டும் அதீத அன்பு காட்டினான். இதனால் கோபம் கொண்ட தட்சன், ‘அழகின் மீது கொண்ட கர்வத்தால் தான் நீ இப்படி நடந்து கொள்கிறாய். எனவே இனி நீ நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டே போவாய்’ என்று சாபம் கொடுத்தான்.

சோமவார விரதம்

தட்சனின் சாபத்தால், தான் நாளுக்கு நாள் தேய்ந்து வருவதைக் கண்ட சந்திரன், பிரம்மாவிடம் முறையிட்டான். அவரோ சிவபெருமானைத் தஞ்சம் அடையும் படி அறிவுறுத்தினார். இதையடுத்து சந்திரன், சிவனிடம் போய் தஞ்சமடைந்தான். சந்திரன் மீது இரக்கம் கொண்ட ஈசன், அவனைத் தனது சடைமுடியில் வைத்துக் கொண்டார். சந்திரன் அன்று முதல் வளர்ந்தான். ஆனால் அதன் பிறகு தட்சனது சாபத்தால் தேய்ந்தான். இப்படியாக தேய்வதைக் கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) என்றும், வளர்வதை சுக்லபட்சம் (வளர்பிறை) என்றும் வழங்கலாயினர்.
சந்திரன், சிவபெருமானுடைய சடைமுடியில் போய் அமர்ந்து கொண்டது, ஒரு கார்த்திகை மாத முதல் சோமவாரம் ஆகும். அப்படி அமர்ந்த சந்திரன், சிவபெருமானிடம் ‘ஐயனே! சோமவாரம் தோறும் பூஜை செய்து விரதம் இருக்கும் மக்களுக்கு, நற்கதியைக் கொடுத்து அருள வேண்டும்’ என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அப்படியே அருளினார்.