சசிகலாவிடம் 500 கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்த வருமான வரித்துறை; ஆம், இல்லை என்று பதில் கூறியதாக தகவல்!

 

சசிகலாவிடம் 500 கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்த வருமான வரித்துறை; ஆம், இல்லை என்று பதில் கூறியதாக தகவல்!

பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம்  வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு, ஜெயா டிவி அலுவலகம் ஆகியவற்றில் கடந்த ஆண்டு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் அவரது வீட்டுக்குள் வருமான வரித்துறை நுழைந்திருக்க முடியுமா என பலர் கேள்வி எழுப்பினர்.  அதேபோல் சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் அலுவலகங்கள், அவரது உறவினர்களான டிடிவி தினகரன், விவேக் உள்ளிட்டோரின் வீடுகளிலும், அவர்களுக்குத் தொடர்புடைய அலுவலகங்கள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 

சோதனையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில்  அதிகாரிகள் சசிகலாவின் உறவினர்களான டிடிவி தினகரன், விவேக் ஜெயராமன், கிருஷ்ண பிரியா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்த வருமான வரித்துறையினர் சிறைத்துறையிடம் அனுமதி பெற்றது. இதன் அடிப்படையில் நேற்று காலை முதல் சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் 500 கேள்விகளைத் தொடுத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

பல கேள்விகளுக்கு சசிகலா ஆம், இல்லை என்று மட்டும் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.