சகோதரர் சுட்டுக்கொலை; தலைமறைவாக இருந்த திமுக நிர்வாகி கைது!
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளராகவும், விஜய் மக்கள் மன்றத் தலைவராகவும் இருந்து வரும் பில்லா ஜெகன், தனது சகோதரர்களுடன் சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளார்
தூத்துக்குடி: சகோதரரை சுட்டுக் கொன்ற புகாரில் தலைமறைவாக இருந்த திமுக நிர்வாகி பில்லா ஜெகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி சின்னக்கடைத் தெருவை சேர்ந்தவர் பில்லா ஜெகன். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளராகவும், விஜய் மக்கள் மன்றத் தலைவராகவும் இருந்து வரும் பில்லா ஜெகன், தனது சகோதரர்களுடன் சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளார். அத்துடன், சகோதரர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பில்லா ஜெகனுடன் அவரது சகோதரர்களில் ஒருவரான சிம்சன், சில நாட்களாக சொத்து கேட்டு தகராறு செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, சொத்துகளை பிரிப்பதற்கான பேச்சுவார்த்தை கடந்த திங்கள்கிழமை இரவும் ஜெகனின் வீட்டில் நடந்துள்ளது.
அப்போது, ஏற்பட்ட தகராறு காரணமாக சிம்சனை தன்னிடமிருந்த 9 மி.மீ. கள்ளத்துப்பாக்கியை கொண்டு ஜெகன் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சிம்சனை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், கடுமையான ரத்த போக்கு காரணமாக அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, பில்லா ஜெகன் தலைமறைவாக, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் வாசிங்க
போதையில் தகராறு செய்த மகன்: கொலை செய்து தற்கொலை நாடகமாடிய குடும்பம்!