‘கோழிக்கறியில தான் கொரோனா பரவுது’.. பொய்யான தகவல்களை வைத்து வீடியோ வெளியிட்ட நபர் கைது!
சீன நாட்டில் பரவிய கொரோனா வைரஸ் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. இது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீன நாட்டில் பரவிய கொரோனா வைரஸ் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. இது உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடிய வகை வைரஸ் தாக்குதலால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. முதன் முதலாக இந்தியாவில் இன்று கொரோனா பாதிப்பால் சவுதியில் இருந்து இந்தியாவுக்கு வந்த முகம்மது உசேன் சித்திக் என்ற முதியவர் பலியாகினார்.
இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், கொரோனா கோழிக்கறியின் மூலமாகத் தான் பரவுகிறது என்று தமிழகத்தில் வதந்தி பரவியது. இதனால் கோழிக்கறி மற்றும் முட்டை வியாபாரம் படுவீழ்ச்சி அடைந்தது. அதாவது ஒரு கிலோ கோழிக்கறி ரூ.60க்கும் அதற்கு முட்டை இலவசம் என்ற அளவிற்கு விற்பனை பாதிக்கப்பட்டது.
கோழிக்கறி பற்றி வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வதந்தியை பரப்பியவரைக் கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். குறிப்பாக வாட்ஸ் ஆப்பில் பரப்பப்படும் தகவல்கள் பற்றி சைபர் போலீசார் கண்காணித்து வந்தனர்.
அதன் மூலம் நாமக்கல், சேலம் மாவட்டங்களில் உள்ள கோழிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் அதனைச் சாப்பிட்டால் உங்களுக்கும் கொரோனா வரும் என்றும் சோஷியல் மீடியாக்களில் தகவல் பரவி வந்ததும் அதனை கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் பரப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தான் பொய்யான தகவல்களைக் கொண்டு வீடியோ வெளியிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். அதன் பின்னர், தான் கூறியது பொய்யான தகவல்கள் என்று மற்றொரு வீடியோ வெளியிட்டதை அடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.