கோழிக்கறியின் மூலம் கொரோனா பரவுவதாக வதந்தி கிளப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : முதல்வரிடம் மனு!
இந்த வைரஸ் கோழிக்கறியின் மூலமாகத் தான் பரவுகிறது என்று சமீபத்தில் பரபரப்பான தகவல் வெளியானது.
இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதிக்கச் செல்லும் மருத்துவர்களுக்குக் கூட இந்த நோய் பரவுவதால் சீன அரசு மக்களைப் பாதுகாக்க முடியாமல் தவித்து வருகிறது.
இந்த வைரஸ் கோழிக்கறியின் மூலமாகத் தான் பரவுகிறது என்று சமீபத்தில் பரபரப்பான தகவல் வெளியானது. இதன் எதிரொலியாக கோழிக்கறி விற்பனை அதிரடியாகக் குறைந்துள்ளது. இந்த வதந்தி பரவியதில் இருந்து இந்தியக் கோழிப்பண்ணைக்கு ரூ.1,310 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின. கோழி இறைச்சி மூலம் கொரோனா பரவுவதாக வெளியான தகவல் உறுதி செய்யப்படாத நிலையில் இத்தகைய வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது, கோழி விற்பனையாளர்களிடையே கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நாமக்கல்லுக்கு வந்த முதல்வர் எடப்பாடியிடம் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சம்மேளத்தினர் இந்த வதந்திகளைப் பற்றிக் கூறினார். இந்த வதந்திகளால் விற்பனை பாதிப்பு ஏற்படுவதாகவும் இத்தகைய வதந்திகளைப் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி மனு அளித்துள்ளனர். மேலும், கோழிப் பண்ணையாளர்களுக்காகத் தனியாக நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.