கோடநாடு மர்ம மரணங்களுக்கு பின்னணியில் ஈபிஎஸ்? பத்திரிகையாளர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
கோடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரம் மரணங்களுக்கு பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை: கோடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரம் மரணங்களுக்கு பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக பத்திரிகையாளர் மாத்யூ சாமுவேல் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜெயலலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது, எஸ்டேட்டின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்ற வடநாட்டு நபர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவராக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் என்பவர், சாலை விபத்தில் மரணம் அடைந்தார். மற்றொரு முக்கியக் குற்றவாளி சயான், கேரளாவில் தனது குடும்பத்தோடு காரில் சென்றபோது நேர்ந்த விபத்தில், மகள் மற்றும் மனைவியை இழந்த நிலையில், அவர் மட்டும் உயிர் பிழைத்தார்.
அதேபோல், கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் என்ற இளைஞரும் தற்கொலை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த இந்த மர்ம மரணங்களின் பின்னணியில் யார் இருப்பது என்பது தற்போது வரை மர்மமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், கேரளா விபத்தில் உயிர்பிழைத்த சயான் தற்போது பிரபல புலனாய்வு பத்திரிகையான தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், மர்மமான இருக்கும் மரணங்களின் பின்னணியில் ஒரு மாநில முதல்வர் இருப்பதாக, வழக்கில் சிக்கிய நபரே வாக்குமூலம் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.