கொள்ளையர்களை அடித்து விரட்டிய நெல்லை தம்பதிக்கு சிறப்பு விருது!
நெல்லையில் கொள்ளையர்களைத் துணிச்சலோடு அடித்து விரட்டிய தம்பதிக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சென்னை: நெல்லையில் கொள்ளையர்களைத் துணிச்சலோடு அடித்து விரட்டிய தம்பதிக்கு முதல்வரின் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நாட்டின் 73 வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை கோட்டையில் கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார்.இதையடுத்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
இந்நிலையில் இஸ்ரோ தலைவராக உள்ள சிவனுக்கு டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது. அவர் வராததால் அவரது விருதை வேறொரு நபர் வாங்கினார். அதே போல் துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை மீன்வளத்துறை உதவி இயக்குநர் ரம்யா லட்சுமி தட்டி சென்றார். இவர் கடலூர் மாவட்டத்தில் மீன்வளத்தைப் பாதிக்கும் சுருக்கு மடி வலைகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தியதற்காக இந்த விருதைப் பெற்றார். அவருக்கு விருதுடன் சேர்த்து 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இது ஒருபுறமிருக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளையர்களை அடித்து விரட்டியதில் அதிகம் பேசப்பட்ட சண்முகவேலு, செந்தாமரை தம்பதிக்கு அதீத துணிவிற்கான முதல்வரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.