கொளுத்தும் வெயில்: ஆன்லைனில் கிடைக்கும் பழைய சோறு: அலைமோதும் கூட்டம்!?
உடலுக்கு நன்மையைக் கொடுக்கும் பழைய சோறு விற்பனையால் மதுரை உணவகம் ஒன்று பிரபலமடைந்துள்ளது.
மதுரை: உடலுக்கு நன்மையைக் கொடுக்கும் பழைய சோறு விற்பனையால் மதுரை உணவகம் ஒன்று பிரபலமடைந்துள்ளது.
கொளுத்தும் கோடைக்கால வெயிலில் என்னதான் ருசியான உணவு எடுத்துக் கொண்டாலும் அது நம் நாக்குக்குச் சுவையைத் தருவதில்லை. அதே சமயம் இந்த கோடை வெயிலில் பலரது பேவரட் உணவு என்றால் அது பழைய சோறு தான். ஆனால் இந்த உணவு உணவகங்களில் விற்கப்படுகிறதா என்ற கேள்விக்குப் பெரும்பாலானவர்களின் பதில் இல்லை என்பதேயாகும். அத்தகைய உடல்வலிமையைக் கொடுக்கவல்ல பழையசோறுக்கென்றே மதுரை மாட்டுத்தாவணியில் பிரத்தியேகமாகச் செயல்படும் உணவகம் வாடிக்கையாளர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம்.. மதுரை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் ஊறுகாய், வத்தல், சின்னவெங்காயம், பச்சைமிளகாய், தயிர், வடையுடன், ஒரு சிறிய மண்சட்டியில் பழைய சோற்றைப் பரிமாறுகின்றனர். பாரம்பரியமான மண் வாசம் மறவா இந்த ‘பழைய சோறு’ வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த பழைய சோறு விலை ரூ. 50. இந்த சோற்றை முதல் நாள் இரவே சமைத்து அடுத்த நாள் நீராகாரமாக்கித் தருகிறார்கள். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி இந்த உணவை உண்டு செல்வதால் இது உணவகம் அப்பகுதியில் பிரபலமான ஒன்றாக மாறியுள்ளது.
வெயில் காலத்தில் பிரியாணியை விட பழைய கஞ்சிக்கே மவுசு அதிகம் என்பதால் வாடிக்கையாளர்கள் இந்த உணவை ஆன்லைனிலும் ஆர்டர் செய்து உண்கின்றனர்.