கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது…. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்…
நம் நாட்டில் நேற்று வரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,615ஆக உயர்ந்துள்ளது.
தொற்று நோயான கொரோனா வைரஸ் நம் நாட்டில் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதித்தவர்கள் மற்றும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இருப்பினும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பாதிப்பு மற்றும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் உள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) கொரோனா வைரஸ் பரிசோதனை மற்றும் பாதிப்பு குறித்து விவரங்களை தினமும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2020 ஏப்ரல் 19ம் தேதி இரவு 9 மணி நிலவரப்படி இதுவரை 3.83 லட்சம் தனிநபர்களிடம் மொத்தம் 4.01 லட்சம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 27,824 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1,135 மாதிரிகளில் கொரோனா வைரஸ் உறுதியாகி உள்ளது. நேற்று இரவு 9 மணி நிலவரப்படி, நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,615ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 519ஆக உயர்ந்துள்ளது.