கொரோனா முகாமிலிருந்து தப்பிய இளைஞர்: காதலி வீட்டில் வைத்து பிடித்த போலீசார்!
இதனால் மேற்கூறிய இளைஞரையும் மதுரை சின்ன உடைப்பு கொரோனா கண்காணிப்பு முகாமில் வைத்து கண்காணித்து வந்தனர்.
சிவகங்கை மாவட்டம் கீழபூங்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 21 ஆம் தேதி விமானம் மூலம் துபாயிலிருந்து மதுரை வந்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளிலிருந்து வருவோரை முகாமில் வைத்து சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது. இதனால் மேற்கூறிய இளைஞரையும் மதுரை சின்ன உடைப்பு கொரோனா கண்காணிப்பு முகாமில் வைத்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், அவர் திடீரென முகாமிலிருந்து நேற்று அதிகாலை தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து அவனியாபுரம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை சிவகங்கையில் உள்ள அவரது காதலி வீட்டில் மடக்கிப் பிடித்தனர். காதலியைக் காண ஆவலாக இருந்ததால் தப்பியோடியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சிவகங்கையில் உள்ள அவரது காதலி வீட்டிலும் கண்காணிப்பு நடத்த மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.