கொரோனா நடவடிக்கைக்கு கேட்டது ரூ.9000 கோடி… மத்திய அரசு கொடுத்தது ரூ.510 கோடி! – வேதனையில் தமிழக அரசு
தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரூ.3000ம் கோடி தேவை என்று சில தினங்களுக்கு முன்பு நடந்த முதலமைச்சர்களுடனான மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கைவிடுத்தார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு ரூ.9000ம் கோடி கேட்ட நிலையில் மத்திய அரசு ரூ.510 கோடியை ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ரூ.3000ம் கோடி தேவை என்று சில தினங்களுக்கு முன்பு நடந்த முதலமைச்சர்களுடனான மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கைவிடுத்தார். மேலும், என்95 முகக்கவசம், டாக்டர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள், வென்டிலேட்டர்கள் வாங்க ரூ.3 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இது தவிர தமிழக அரசுக்கு தர வேண்டிய சில ஆயிரம் கோடி நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
ஆனால் மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.510 கோடியை இதற்காக ஒதுக்கியுள்ளது. இந்தியா முழுக்க 28 மாநிலங்களுக்கு மொத்தமாக மத்திய அரசு வெறும் 11,092 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக அளவில் நிதி தேவைப்படும். மேலும், பரிசோதனையும் அதிக அளவில் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கி உதவ வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.