கொரோனா…எதிர்கொள்வது எப்படி? முழுமையான கையேடு!

 

கொரோனா…எதிர்கொள்வது எப்படி? முழுமையான கையேடு!

சீனாவில் உருவான கொரோனா வைரஸை சீன அரசு கிட்டத்தட்ட வீழ்த்திவிட்ட நிலையில் மற்ற நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. சீனாவில் லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் ஒரு சில ஆயிரங்களில்தான் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. சீன அரசின் தீவிர நடவடிக்கை, மக்களின் ஒத்துழைப்பு போன்றவை கொரோனாவுக்கு காவு கொடுப்பதை தடுத்து நிறுத்தியுள்ளது. கொரோனாவை நினைத்து பீதியடைய தேவையில்லை, முன்னெச்சரிக்கை மட்டுமே போதுமானது

சீனாவில் உருவான கொரோனா வைரஸை சீன அரசு கிட்டத்தட்ட வீழ்த்திவிட்ட நிலையில் மற்ற நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. சீனாவில் லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலும் ஒரு சில ஆயிரங்களில்தான் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. சீன அரசின் தீவிர நடவடிக்கை, மக்களின் ஒத்துழைப்பு போன்றவை கொரோனாவுக்கு காவு கொடுப்பதை தடுத்து நிறுத்தியுள்ளது. கொரோனாவை நினைத்து பீதியடைய தேவையில்லை, முன்னெச்சரிக்கை மட்டுமே போதுமானது. 
சுவாசப் பிரச்னையை ஏற்படுத்தி உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய வைரஸ் குடும்பத்தை கொரோனா என்று மருத்துவ உலகம் அழைக்கிறது. இதில் 2019ம் ஆண்டு வெளிப்பட்ட புதிய வகையான வைரஸ் கிருமிதான்  கொரோனா வைரஸ் 2019 (கோவிட் 19) என்று அழைக்கப்படுகிறது. 

அறிகுறிகள்

கொரோனா கோவிட் 19 வைரஸ் மனித உடலுக்குள் நுழைந்த 2வது நாள் முதல் 14வது நாட்களுக்குள் தன்னுடைய வேலையைக் காட்ட ஆரம்பிக்கும்.

  • காய்ச்சல்
  • இருமல்
  • மூச்சு விடுவதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல் இருக்கும்.

இதனுடன், சோர்வு, உடல் வலி, மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி ஆகியவை இருந்தால் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம். எல்லோருக்கும் இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூற முடியாது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொருத்து அதன் தீவிரம் மாறுபடும். என்ன அளவு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனைதான் ஒரே வழி.

corona-symptoms

எல்லோருக்கும் இதுபோன்ற அறிகுறிகள் தென்படும் என்று கூற முடியாது. ஏற்கனவே மூச்சுத் திணறல், ஆஸ்துமா, சி.ஓ.பி.டி போன்ற நுரையீரல் தொடர்பான நோய்கள், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு அறிகுறிகள் தெரிவதற்கான வாய்ப்பு குறைவுதான். கொரோனா அறிகுறி தென்பட்டாலே தகுந்த மருத்துவ உதவியை நாடுவதுதான் தீர்வு. எந்த நிலையிலும் சுய மருத்துவம் மட்டும் வேண்டாம். 
இந்த கிருமி காற்றில் பரவக் கூடியது, நோயாளி தொட்ட பொருட்களைத் தொடும்போது மற்றவர்களுக்கும் பரவக் கூடியது. எனவேதான் அவ்வப்போது கைகளைக் கழுவும் படி மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எப்படிப் பரவுகிறது?
ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நெருங்கிப் பழகுவதன் மூலம் பரவுகிறது. கொரோனா வைரஸ் தொற்று உள்ளவரின் மூச்சுக் காற்று, தும்மல், இருமல் மூலமாக மற்றவர்களுக்கு பரவலாம். நோய்த் தொற்று உள்ள ஒருவர் தன்னுடைய கண், மூக்கு, வாயைத் தொடும்போது அவரது கையில் வைரஸ் கிருமி பரவுகிறது… அவர் தொடும் இடம் எல்லாம் வைரஸ் கிருமி இருக்கலாம். 

coughing-90

ஏற்படுத்தும் பாதிப்பு:
இரு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு ஏற்படலாம். கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்போது உடல் உறுப்புக்கள் ஒன்றன்பின் ஒன்றாக செயலிழக்கும். கடைசியில் மரணம் ஏற்படும்.

தடுக்கும் வழி:
தனித்திருத்தல் மட்டுமே இப்போதைக்கு கொரோனா வைரஸ் பரவுதலைத் தவிர்க்கும். நோய் வந்தவர்கள் மட்டுமல்ல, நோய் வராமல் தடுக்கவும் தனித்திருப்பது நல்லது. 

கொரோனா கிருமியை அழிக்க மருந்தோ, நோய் வராமல் தடுக்க தடுப்பூசியோ இன்னும் கண்டறியப்படவில்லை. கண்டறிய குறைந்தது சில மாதங்களாவது ஆகும். அதற்குள்ளாக உலகம் முழுக்க இந்த வைரஸ் கிருமி பரவிவிடும் வாய்ப்பு உள்ளது.
எனவே,

  • கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
  • நமக்கும் மற்றவர்களுக்கும் இடையே குறைந்தது ஆறு அடியாவது இடைவெளி இருக்க வேண்டும்.
  • நோய் அறிகுறி தென்பட்டவர்களை சந்திக்கவே வேண்டாம்.
  • உங்கள் கைகளை அவ்வப்போது சோப் அல்லது கிருமிநாசினி போட்டுக் கழுவ வேண்டும். குறைந்தது 20 விநாடிகளாவது கையில் கிருமி நாசினி போட்டுக் கழுவ வேண்டும். குறைந்தது 60 சதவிகிதம் வரையாவது ஆல்கஹால் உள்ள கிருமி நாசினியைப் பயன்படுத்துவது நல்லது. 
  • தும்மல் வரும்போது கைக்குட்டை, டிஷ்ஷு வைத்து வாய், மூக்கை மூடிக்கொள்ள வேண்டும்.
  • பொது இடங்களுக்கு செல்லும்போது வாய், மூக்கு, கண்களைத் தொடுவது கூடாது.
  • உணவு, குளிர்பானம், காபி, டீ என எந்த ஒரு பொருளையும் மற்றவர்களுடன் பகிர வேண்டாம்.
  • வீட்டில் எல்லோரும் தொடக்கூடிய பகுதிகளை அவ்வப்போது கிருமிநாசினி பயன்படுத்தி சுத்தப்படுத்த வேண்டும்.
  • முடிந்தவரை வேலைக்கு, பள்ளி, கல்லூரிக்கு, பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்துவிடுங்கள். 
  • முடிந்த வரை பொது போக்குவரத்தைப் பயன்படுத்தாமல் இருங்கள்.

corona-preventions

அறிகுறிகள் தென்பட்டால்…
அறிகுறிகள் தென்பட்டால் பதற்றமடைய வேண்டாம். முடிந்த வரை தனிமையில் இருங்கள். மருத்துவ உதவியை நாடுங்கள். அரசு இலவசமாகவே சிகிச்சை அளிக்கும். 
சிகிச்சை என்ன?
ஏற்கனவே கூறியபடி கொரோனாவுக்கு சிகிச்சை இல்லை. எப்படி டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தி உயிரைக் காப்பாற்றுகிறார்களோ, அதேபோல்தான் கொரோனா வைரஸ் கிருமியிலும்… கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியைக் கட்டுப்படுத்த வலி நிவாரணி, இருமல், சளியைப் போக்க மருந்து அளிக்கப்படுகிறது. சில இடங்களில் எச்.ஐ.வி வைரஸ் கிருமிக்கு எதிராக பயன்படுத்தப்படும் மருந்தை அளித்து கட்டுப்படுத்துகிறார்கள்.
சிகிச்சை முறையை மருத்துவர்கள் கவனித்துக் கொள்வார்கள்… கொரோனா அறிகுறி தென்பட்டால் ஓய்வெடுக்க வேண்டும், அதிக தண்ணீர், நீராகாரம் எடுக்க வேண்டும். நம்முடைய சிறுநீர் வழியாக கிருமிகள் வெளியேற்றப்படும். டாக்டர் சொல்வதை முழுமையாக பின்பற்றினால் கொரோனாவில் இருந்து தப்பலாம்!