கொரோனா உதவித் தொகை வழங்குவதில் ஆளுங்கட்சி அத்துமீறல்! – டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
கொரோனா பாதிப்பு உதவித் தொகைக்கான டோக்கன் அளித்தபோதே ஆளும் கட்சியினர் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் வழங்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இப்போது நேரடியாக வீடுகளுக்கே சென்று பணமாக வழங்கும்போது, இதுபோன்ற அத்துமீறல்கள் இல்லாமல் தடுக்க பழனிசாமி அரசு முன்வர வேண்டும்.நெருக்கடியான நேரத்தில்கூட, ஆட்சியாளர்கள் மோசமான அரசியல் செய்யக் கூடாது
கொரோனா உதவித் தொகை வழங்குவதில் அ.தி.மு.க-வினர் அத்துமீறலில் ஈடுபடுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கொரோனா பாதிப்பு உதவித் தொகைக்கான டோக்கன் அளித்தபோதே ஆளும் கட்சியினர் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் வழங்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இப்போது நேரடியாக வீடுகளுக்கே சென்று பணமாக வழங்கும்போது, இதுபோன்ற அத்துமீறல்கள் இல்லாமல் தடுக்க பழனிசாமி அரசு முன்வர வேண்டும்.நெருக்கடியான நேரத்தில்கூட, ஆட்சியாளர்கள் மோசமான அரசியல் செய்யக் கூடாது.
கொரோனா பெருந்தொற்று நோயைத் தடுப்பதற்கான ஊரடங்கினால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்காக அரசு சார்பில் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகைக்கான டோக்கனை தஞ்சாவூரில் ஆளும் கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் வழங்கியபோது, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுற்றி வளைத்துப் பிடித்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. ஆளும் கட்சியினரின் இந்த செயல், கொரோனா அச்சத்தால் பெரும் இழப்புக்கு ஆளாகியிருக்கும் ஏழை-எளிய மக்களுக்கு செய்யும் துரோகமாக அமைந்துவிடும். கொரோனா நிவாரணம் மூலம் ஆட்சியாளர்கள் அரசியல் ஆதாயம் தேட முனைவது சரியானதல்ல.
உதவித் தொகை அவரவர் வீடுகளில் நேரடியாக பணமாக வழங்கப்படும்’ என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருப்பது ஆளும் கட்சியினரின் அத்துமீறலை இன்னும் அதிகப்படுத்திவிடுமோ என்ற சந்தேகத்தை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது- எனவே, ஆளும் கட்சியினரின் தலையீடு இல்லாமல், அரசு ஊழியர்களை வைத்து தகுதியுள்ள ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் முறையாக உதவித்தொகையை வழங்கிட வேண்டும். உதவித் தொகை வழங்கச் செல்வோர் மூலமாக கொரோனா தொற்று பரவாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்” என்று கூறியுள்ளார்.