கொடநாடு மர்ம மரணங்கள்: வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு

 

கொடநாடு மர்ம மரணங்கள்: வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு

கொடுநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் அடுத்தடுத்த மரணங்களுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பிருப்பதாக வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மீது சென்னை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

சென்னை: கொடுநாடு எஸ்டேட் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் அடுத்தடுத்த மரணங்களுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தொடர்பிருப்பதாக வீடியோ வெளியிட்ட பத்திரிகையாளர் மீது சென்னை போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதியன்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தின் போது, எஸ்டேட்டின் காவலாளியாக இருந்த ஓம் பகதூர் என்ற வடநாட்டு நபர் படுகொலை செய்யப்பட்டார். 

kodanad

அதேபோல், இந்த கொள்ளை சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ், கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் உள்ளிட்டோர் மர்மமான முறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 

இதற்கிடையே, மற்றொரு குற்றவாளியான சயான் என்பவர், கேரளாவில் தனது மகள் மற்றும் மனைவியுடன் சென்று கொண்டிருந்த போது நேர்ந்த விபத்தில் அவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

edapadi

இந்நிலையில், தெஹல்கா என்ற பிரபல புலனாய்வு பத்திரிகையில் முன்னாள் ஆசிரியராக இருந்த சாம் மேத்யூஸ் என்பவரிடம் வீடியோ வாயிலாக சயான் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வீடியோவை டெல்லியில் நேற்று வெளியிட்ட சாம் மேத்யூஸ், இந்த மர்ம மரணங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக பகிரங்கமாக குற்றம்சுமத்தினார். 

இந்தியா முழுவதும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சென்னை போலீசாரிடம் அதிமுக தொழில்நுட்ப பிரிவினர் புகார் அளித்தனர். இதனையடுத்து, முதல்வர் பழனிசாமியை விமர்சித்து வீடியோ வெளியிட்ட சாம் மேத்யூஸ், மனோஜ், சயான் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.