கே.கே.நகரில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்: போலீசார் தீவிர விசாரணை

 

கே.கே.நகரில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம்: போலீசார் தீவிர விசாரணை

கே.கே.நகர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: கே.கே.நகர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக கே.கே.நகர் விஜயராகவபுரம் 3வது  தெருவில் வசித்து வந்தார். முன்னதாக மதுரையில் குமுதம், தினகரன் போன்ற பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக பணியாற்றியுள்ள இவருக்கு, இன்னும் திருமணம் நடைபெறவில்லை. 

இந்நிலையில், மோகனின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கே.கே. நகர் காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், காவல் ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். 

அப்போது, கதவை உடைத்துப் பார்த்த போது அழுகிய நிலையில் மோகன் சடலமாக கிடந்துள்ளார். அதனையடுத்து, அவரின் உடலை கைப்பற்றிய போலீசார், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், மோகனின் மரணம் இயற்கையானதா? அல்லது கொலை ஏதும் நடந்திருக்க வாய்ப்புள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.