கேவலமாக பேசிய வைரமுத்து, ஹெச்.ராஜா,எஸ்.வி.சேகரை எல்லாம் விட்டுட்டு ரஞ்சித்திடம் நீதி அமைப்புகள் காட்டம் காட்டுகின்றன -எவிடென்ஸ் கதிர் இயக்குநர்
பா.ரஞ்சித் ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் கைது செய்யக் கூடாது என்ற உத்தரவை நீட்டிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பா.ரஞ்சித் ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் கைது செய்யக் கூடாது என்ற உத்தரவை நீட்டிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில், வழக்கறிஞர் எவிடென்ஸ் கதிர், இயக்குநர் ரஞ்சித் மீது அரசியல் ரீதியான பழிவாங்கும் போக்கு இருப்பதாக குற்றம் சாட்டி, கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்பட இயக்குனர் ரஞ்சித் கருத்தின் மீது எனக்கு முரண்பாடு உண்டு. சமீபத்திய அவரது நடவடிக்கைகளிலும் எனக்கு முரண்பாடு உண்டு. ஆனால் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் தன்மை உள்நோக்கத்தோடு அரசியல் ரீதியான பழிவாங்கும் போக்கு பாரபட்சமான சட்ட நடவடிக்கை போன்றவற்றை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். ரஞ்சித் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இ.த.ச 153 மற்றும் 153A(1)(a). இரண்டு பிரிவுகளும் சாதாரணமானது. அதாவது பிணையில் வரக்கூடிய குற்றமாகும்.
குற்றவியல் நடைமுறைச்சட்டம் 41-A பிரிவானது இந்த உரிமையை வழங்கியிருக்கிறது. ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கான தண்டனை என்பது 6 மாதம் முதல் 3 வருடம் மட்டுமே. ஆனால் 7 வருடத்திற்கு மேல் தண்டனை பெறக்கூடிய குற்றங்களுக்கு தான் கைது செய்யலாம். ஆகவே ரஞ்சித்திற்கு எளிதாக பிணை கொடுத்திருக்க வேண்டும். ரஞ்சித் மீது ஏற்கனவே எந்த குற்றவியல் வழக்குகளும் இல்லை. ஆகவே அமந்தீப்சிங் வழக்கினை அடிப்படையாக கொண்டு எப்போதோ பெயில் கொடுத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல இந்த வழக்கின் தன்மையை புரிந்து கொண்டு போலீசாரும் ரஞ்சித்தை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபட்டால் அது டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது. ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட 153 மற்றும் 153A(1)(a) ஆகிய பிரிவுகள் வருடத்திற்கு ஆயிரக்கணக்கில் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு பொதுக்கூட்டத்திற்கும் இதுபோன்ற வழக்கினை பதிவு செய்வார்கள். ஆனால் யாரையும் கைது செய்ததில்லை.
ரஞ்சித் பேசியது குற்றமில்லையா? இருக்கலாம். அதற்குரிய வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது. ரஞ்சித் குறிப்பிட்ட நபர்கள் மீது குற்றத்தை இழைக்கவில்லை. கலவரம் தூண்டியதாகத்தான் வழக்கு. ஆகவே ரஞ்சித் பாதிக்கபட்டோரையோ சாட்சிகளையோ மிரட்டுவதற்கான வாய்ப்பில்லை. ஆகவே எளிதாக பெயில் கொடுக்க வேண்டும். ஆண்டாள் குறித்து வைரமுத்து பேசியிருக்கிறார். பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா, எஸ்வி.சேகர் போன்றோர்கள் எல்லாம் மிக கேவலமாக அருவருக்தக்க வகையில் சட்டம் ஒழுங்கினை மீறுகிற வகையில் பேசியிருக்கின்றனர். அப்போதெல்லாம் கேள்வி எழுப்பாத நீதி அமைப்புகள் ரஞ்சித்திடம் மட்டும் காட்டம் காட்டுகின்றன. வழக்கிற்கு ரஞ்சித் ஒத்துழைக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று எளிதாக நீதிமன்றம் உத்தரவு போட்டு பெயில் வழங்கியிருக்க முடியும்.
இதுபோன்று பெயில் ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் வழக்குகளில் வழங்கப்பட்டிருக்கிறது. ஏன் அரசு தரப்பில் கடுமையான ஆட்சேபம் தெரிவித்தும் பெயில் வழங்கப்பட்டிருக்கிறது. இவர் மீது மட்டும் ஏன் பாகுபாடு? திரைப்பட இயக்குனர், நிறைய முதலீடுகளைப் போட்டு அவரை நம்பி படம் எடுக்கின்றனர். புதிய ஒப்பந்தமும் ஆகியிருக்கிறது. இந்த நேரத்தில் இதுபோன்ற கெடுபிடுகள் மூலம் நிலைகுலைய செய்யலாம், வழிக்கு கொண்டு வரலாம் என்று அரசு நினைத்தால் அது அப்பட்டமான ஜனநாயக விரோதமாகும்” கூறியிருக்கிறார்.