கேரளாவில் சிறுமியை கடத்திய கும்பல்; போலீசார் தேடுதல் வேட்டை!
கேரள மாநிலத்தில் சிறுமியை கடத்திய நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் சிறுமியை கடத்திய நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள வலியகுலங்கரா பகுதியில் ராஜஸ்தானில் இருந்து பிழைப்பு தேடி வந்த குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. இவர்களது வீட்டை உடைத்து கடந்த திங்கள்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் நுழைந்த நான்கு பேர் கொண்ட கும்பல், தந்தையை தாக்கி விட்டு அவரது மூத்த மகளை கடத்திச் சென்றுள்ளது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுமியின் பெற்றோர் அளித்த தகவலின் படி, முகமது ரோஷன் எனும் சிறுவன் உள்பட நான்கு பேரை தேடி வருகின்றனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ரோஷன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் நவாஸ் என்பவற்றின் மகன் ஆவார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் ஒருவேளை தவறு செய்திருந்தால் அவன் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக ரோஷன் மற்றும் அவரது கும்பல் ராஜஸ்தானை சேர்ந்த அந்த குடும்பத்துக்கு தொந்தரவு அளித்து வந்துள்ளதாக தெரிவிக்கும் போலீசார், இந்திய தண்டனை சட்டப்பிரிவு 457, 323, 324, 366 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், எர்ணாகுளம் வழியே அண்டை மாநிலங்களுக்கு அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும் அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.