கேமராவில் சுவிங்கம் ஒட்டி, சுவரைத் துளைத்து கொள்ளை முயற்சி… மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!

 

கேமராவில் சுவிங்கம் ஒட்டி, சுவரைத் துளைத்து கொள்ளை முயற்சி… மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!

திருச்சியில் நடைபெற்றதை போலவே, அரியலூர் மாவட்டத்தில் உள்ள நகைக் கடையில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. 

திருச்சி லலிதா ஜுவல்லரியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர், சுவரைத் துளைத்து கோடிக் கணக்கான மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சியில் நடைபெற்றதை போலவே, அரியலூர் மாவட்டத்தில் உள்ள நகைக் கடையில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. 

ttn

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆண்டிமடம் என்னும் பகுதியில் ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான நகைக் கடை ஒன்று உள்ளது. அந்த கடையில் நேற்று இரவு திருட முயன்ற கொள்ளையர்கள் முதலில் சுவரின் மீது ஏறி, அங்கிருந்த சிசிடிவி கேமரா மீது சுவிங்கத்தை ஒட்டியுள்ளனர். இது அங்கிருந்த மற்றொரு கேமராவில் பதிவாகி இருந்தது. நகைக் கடையின் பின்புற சுவரில் ஓட்டை போட்டு உள்ளே நுழைய முயன்றுள்ளனர். சுவரைத் துளைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கே சென்றுள்ளனர். 

ttn

இதனைக் கண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அந்த கடையிலிருந்து நகைகளைத் திருடுவதற்கு முன்னரே மக்கள் அங்குச் சென்று பார்த்ததால், பல லட்சம் மதிப்பிலான நகைகள் தப்பின. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து அந்த கொள்ளையர்கள் யார் என்பதை வலைவீசித் தேடி வருகின்றனர்.