கூட்டணி உரசல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்! கூட்டணி பற்றி பொதுவெளியில் பேச தி.மு.க-வில் தடை

 

கூட்டணி உரசல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த மு.க.ஸ்டாலின்! கூட்டணி பற்றி பொதுவெளியில் பேச தி.மு.க-வில் தடை

தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையே நீண்டுகொண்டிருந்த கூட்டணி உரல்களுக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்உள்ளாட்சித் தேர்தலில் செய்துகொண்ட உடன்படிக்கை படி காங்கிரஸ் கட்சிக்கு மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவியை தி.மு.க ஒதுக்கவில்லை என்று காங்கிரஸ் கூறியது. காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிட வேண்டும் என்று தி.மு.க-வுக்குள் இருந்து குரல் வந்தது

தி.மு.க மற்றும் காங்கிரஸ் இடையே நீண்டுகொண்டிருந்த கூட்டணி உரல்களுக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

alagiri

உள்ளாட்சித் தேர்தலில் செய்துகொண்ட உடன்படிக்கை படி காங்கிரஸ் கட்சிக்கு மாவட்டம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவியை தி.மு.க ஒதுக்கவில்லை என்று காங்கிரஸ் கூறியது. காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிட வேண்டும் என்று தி.மு.க-வுக்குள் இருந்து குரல் வந்தது. இதனால், இரு தரப்புக்கும் இடையே வார்த்தை தடிக்க ஆரம்பித்தது. அ.தி.மு.க-வினர் மட்டுமின்றி கமல் உள்ளிட்டவர்களும் கூட தி.மு.க – காங்கிரஸ் மோதல் பற்றி கருத்து கூறிவந்தனர்.

stalin

இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்னைக்கும் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்தார். அத்துடன் நிற்காமல், இன்று தி.மு.க தலைமையகமான அறிவாலயம் வந்த அவர் மு.க.ஸ்டாலினுடன் பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:
“தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி தொடரும். இந்தக் கூட்டணியில் ஆரோக்கிய விவாதங்கள் வந்து செல்லும். தி.மு.க – காங்கிரஸ் இடையேயான பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக பேசினோம். காங்கிரஸ் தலைமை எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது. துக்ளக் உடன் முரசொலியை ஒப்பிட்டு ரஜினிகாந்த் பேசியது தவறு” என்றார்.

rajini

சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “`தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த, 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களின் ஆதரவைப் பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் குறித்து கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தி, வெற்றி வாய்ப்புள்ள பகுதிகளின் அடிப்படையில் இடங்களைப் பகிர்ந்துகொள்வது என்று தெரிவிக்கப்பட்டு, அவ்வாறே மாவட்ட அளவில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று, இடங்கள் ஒதுக்கீடு செய்துகொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் தி.மு.க தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

alagiri

மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களே வழங்கப்பட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளிப்படையாக ஓர் அறிக்கையை வெளியிட்டார். சுமுகமாகப் பேசித் தீர்த்திருக்க வேண்டிய மறைமுகத் தேர்தல் இடப் பங்கீடு குறித்து, அறிக்கை மூலம் பொது வெளிக்குக் கொண்டு சென்றது, கடந்த சில நாள்களாக இரு தரப்பிலும் விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றத்துக்கு வழி வகுத்துள்ளது.

stalin

தி.மு.க-வின் மனப்பாங்கை உணர்ந்த கே.எஸ்.அழகிரி, “தி.மு.க. – காங்கிரஸ் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது” என்றும், “மதவாத, பாசிச சக்திகளையும் அவர்களை ஆதரித்து கைப்பாவைகளாகச் செயல்பட்டு வருபவர்களையும் எதிர்த்து தி.மு.கழகம் மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்கும்” என்றும் அறிக்கை வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் ஆக்கபூர்வமாகத் தெரிவித்துள்ளார். இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசினார்.

alagiri

ஆகவே, கூட்டணி தொடர்பாக ஏதோ ஒரு சில இடங்களில் இருதரப்புக்கும் ஏற்பட்ட சில நிகழ்வுகளை முன் வைத்து, இரு தரப்புமே இந்த விவாதத்தை மேலும் பொதுவெளியில் நடத்திக் கொண்டிருப்பது, தி.மு.க தலைமையிலான கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என்று ஏங்கித் தவிக்கும் குள்ள நரி சக்திகளுக்கும் சில ஊடகங்களுக்கும் மேலும் அசைபோடுவதற்கான செயலாக அமைவதை நான் சிறிதும் விரும்பவில்லை. ஆகவே விரும்பத்தகாத இத்தகைய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இனியும் இவ்வாறு ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்பதாலும், கூட்டணி குறித்த கருத்துகளை இரு கட்சியினரும் பொது வெளியில் தெரிவிப்பதைக் கட்டாயம் தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.