கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து மரணம்; மாணவர், மாணவிகள் போராட்டம்

 

கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து மரணம்; மாணவர், மாணவிகள் போராட்டம்

தாம்பரம் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து மரணமடைந்ததால் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

சென்னை: தாம்பரம் தனியார் கல்லூரியில் கூடைப்பந்து விளையாடிய மாணவி மயங்கி விழுந்து மரணமடைந்ததால் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

சென்னை தாம்பரம் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் தேவராஜ். இவருக்கு மகிமா என்ற மகள் இருந்தார். மகிமா கிழக்கு தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு வேதியியல் படித்து வந்தார். இந்த கல்லூரியில் ‘ஸ்போர்ட்ஸ் பார் ஆல்’ என்ற பெயரில் ஒவ்வொரு துறையிலும் அனைத்து மாணவ–மாணவிகளும் கட்டாயமாக விளையாட்டில் பங்கேற்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் கூடைப்பந்து விளையாட்டு நடைபெற்றது. விளையாட்டில் மகிமா கலந்து கொண்டு விளையாடியுள்ளார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாகதெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் செய்வதறியாது மகளின் உடலை வீட்டுக்கு கொண்டு சென்றனர். அதனையடுத்து காவல்துறையினரிடன் கூற்றுப்படி மகிமாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய பெற்றோர்கள் அனுமதித்தனர்.

இதனையடுத்து மாணவி மரணம் அடைந்ததை தொடர்ந்து நேற்று கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இருப்பினும் கல்லூரிக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவிகள் கட்டாய விளையாட்டு பயிற்சியை தடை செய்ய வேண்டும் என கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கட்டாய விளையாட்டு பயிற்சி ரத்து செய்யப்படும் என்றும் வெள்ளிக்கிழமை இது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதனால் மாணவர், மாணவிகள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.