குவா…குவா….காலத்தில் இருந்தே திமுக உறுப்பினர் உதயநிதி-வைரலாகும் புகைப்படம்
திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என அவரது ரசிகர்கள் தாக்கல் செய்துள்ள விருப்ப மனுவின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என அவரது ரசிகர்கள் தாக்கல் செய்துள்ள விருப்ப மனுவின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்ததையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து, வருகிற 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழகத்திலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதியை வெற்றி பெறச் செய்த தொகுதி என்பதால், தொகுதியை தக்கவைத்துக் கொள்ள திமுக சார்பில் வெயிட்டான வேட்பாளரை களமிறக்க ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது.
அதேசமயம், தொகுதியை கைப்பற்றி தன் இருப்பை நிரூபிக்க தினகரன் ஒரு புறமும், எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவால் கைப்பற்ற முடியாத திருவாரூர் தொகுதியை நாம் கைப்பற்றிட வேண்டும் என எடப்பாடியும் பல்வேறு யூகங்களை வகுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்கள், அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த வகையில், நடிகர் உதயநிதி ஸ்டாலினை திருவாரூர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விருப்ப மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அதில், உதயநிதி ஸ்டாலின் பிறந்த ஆண்டும், திமுக உறுப்பினராக அவர் பதிவு செய்த ஆண்டும் ஒரே ஆண்டாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியதையடுத்து, குவா…குவா….காலத்தில் இருந்தே திமுக உறுப்பினராக உதயநிதி பதிவு செய்துவிட்டதாக நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.