குழந்தை வரம் கேட்ட தம்பதியிடம் நூதனமாக தங்க நகை கொள்ளையடித்த போலி சாமியார்

 

குழந்தை வரம் கேட்ட தம்பதியிடம் நூதனமாக தங்க நகை கொள்ளையடித்த போலி சாமியார்

குழந்தை வேண்டி பரிகாரபூஜை செய்வதாகக் கூறி கணவன்-மனைவியை தாக்கி தங்க நகையை கொள்ளையடித்த போலி சாமியார் தலைமறைவானார்.

காஞ்சிபுரம்: குழந்தை வேண்டி பரிகாரபூஜை செய்வதாகக் கூறி கணவன்-மனைவியை தாக்கி தங்க நகையை  கொள்ளையடித்த போலி சாமியார் தலைமறைவானார்.

மதுராந்தகம் அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன். பெயிண்டர். இவரது மனைவி ஜானகி (30) இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை.

இந்த நிலையில் பிரபாகரனுக்கு காஞ்சிபுரம் அடுத்த தாமரைத் தாங்கல் பகுதியைச் சேர்ந்த சாமியார் பாபு உடன் தொடர்பு ஏற்பட்டது. அவரிடம் தனக்கு குழந்தை இல்லையே என்று கூறி வருத்தப்பட்டார். இதையடுத்து பாபு, பௌர்ணமி அன்று ரகசிய யாகம் நடத்தினால் உங்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று பிரபாகரனிடம் கூறினார்.

கணவன்-மனைவி இருவரும் குளித்துவிட்டு நகைகள் அணிந்து யாகத்தில் இருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனை நம்பிய பிரபாகரன் ரகசிய பரிகார பூஜைக்கு சம்மதித்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு பிரபாகரன் தனது மனைவி ஜானகியுடன் தாமரைத் தாங்கல் கிராமத்துக்கு சென்றார். அவர்களை சாமியார் பாபு, இரவு 11 மணி அளவில் தாமரைத் தாங்கல் கிராமத்துக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று யாகம் செய்தார். அப்போது கணவன்-மனைவி இருவரும் கண்ணை மூடிக் கொண்டு சாமி கும்பிடுங்கள் என பாபு கூறினார்.

தம்பதி இருவரும் கண்ணை மூடிக் கொண்டிருந்த போது திடீரென பாபு அங்கிருந்த கல்லால் பிரபாகரனின் முகத்தில் தாக்கினார். பின்னர் ஜானகியையும் தாக்கி கண் இமைக்கும் நேரத்தில் அவரது கழுத்தில் இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

அதிர்ச்சி அடைந்த ஜானகி கூச்சலிட்டார். கிராம மக்கள் திரண்டு வந்து காயம் அடைந்த பிரபாகரனை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர். தப்பி ஓடிய போலி சாமியார் பாபுவை தேடி வருகின்றனர்.