குலசை முத்தாரம்மன் தசரா திருவிழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

குலசை முத்தாரம்மன் தசரா திருவிழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவில் நேற்று இரவு சூரசம்ஹார நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

குலசை முத்தாரம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம் .இந்தாண்டிற்கான விழா இங்குள்ள ஞானமூர்த்தீஸ்வரர் உடணுறை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழா நாட்களில் தினமும் காலையில் அபிஷேகம் மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் பல்வேறு அலங்காரத்தில் ரத வீதியுலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

தசரா குழுவினர் குலசேகரன்பட்டினத்துக்கு விடிய, விடிய வந்த வண்ணம் இருந்தனர். குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. குலசேகரன்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையோரம் நீண்ட தூரத்துக்கு பக்தர்களின் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன.

kulasi

திருவிழாவின் 10-ம் நாளான நேற்று இரவு 11 மணிக்கு மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் விரித்த சடை முடியுடன், கையில் திரிசூலம் ஏந்தி வதம் செய்ய கடற்கரை நோக்கிப் புறப்பட்டார். அம்பாள் புறப்பட்டபோதே, கைகளில் ஆயுதங்கள் ஏந்திய மகிஷாசூரனும் அம்பாளை எதிர்த்து நின்றபடியே போருக்குப் புறப்பட்டார். 

மகிஷாசூர வதத்தினைக் காண வந்திருந்த பக்தர்கள்  மாலை 6 மணி முதலே கடற்கரையில் குவிந்தனர். பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், பக்தி கோஷங்களை எழுப்பியும் வந்தனர். வேடம் அணிந்த பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தினர். நள்ளிரவு 12 மணிக்குப் போர் துவங்கியது. முதலில்  மகிஷாசூரன் இரண்டாவதாக சிங்கமுகன், மூன்றாவதாக எருதுமுகன் மற்றும் இறுதியாகச் சேவல் முகம் வதம் நடைபெற்றது. 

அதனையடுத்து தொடர்ந்து, கடற்கரையில் அம்பாளை சாந்திப்படுத்தி குளிர்விக்கும் விதமாகப் பால் அபிஷேகமும், விசேஷ தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர், சிதம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து தேரில் எழுந்தருளி வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காப்பு களைதல், மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிக்கு பிறகு தசரா திருவிழாவுக்காக ஏற்றப்பட்ட கொடிப்பட்டம் இறக்கப்படுகிறது. இத்துடன் உலக புகழ் பெற்ற தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.