குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா ஏற்பாடுகள் தீவிரம்!

 

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா ஏற்பாடுகள் தீவிரம்!

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா 19ஆம் தேதி நடைபெற உள்ளதால்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆண்டு தோறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டிற்கான தசராவிழா நாளை மறுதினம் நடைபெற இருப்பதால் விழா கோலம் பூண்டுள்ளது குலசை .இந்த தசரா விழாவில் 15 லட்சத்திர்க்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கபடுவதால் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றது.

kulasaifg

குலசையை ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கும்மைசூர் பகுதியை ஆண்ட மன்னர்களுக்கும் முன்பு உறவு முறை ஏற்பட்டதாம். இதனால் தான் தசரா திருவிழா மைசூர் போலவே குலசையிலும் தோன்றியதாக சொல்கிறார்கள்.

குலசேகரப்பட்டினத்தில் வீரகாளியம்மன், பத்ரகாளியம்மன், கருங்காளியம்மன், முப்புடாரியம்மன், முத்தாரம்மன், உச்சினி மாகாளியம்மன், மூன்று முகம் கொண்ட அம்மன், வண்டிமறித்த அம்மன் என்று அட்டகாளிகளுக்கும் கோவில் உள்ளது.குலசை கோவில் கிராமத்து கோவிலாக இருந்தாலும் சாதி, மத வேறுபாடின்றி எல்லாரும் அருள் பெற்று பங்கேற்கும் சக்தி தலமாக உள்ளது.

kulasaihjj

குலசை முத்தாரம்மன் ஆலயத்தில் தொடக்க காலங்களில் கொடி மரம் எதுவும் நிறுவப்படவில்லை. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு தான் கொடி மரம் வைக்கப்பட்டது.

பொதுவாக சிவாலயங்களில் லிங்கத்தை நோக்கியபடி நந்தி இருக்கும். ஆனால் குலசையில் அம்மனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால் நந்திக்கு பதில் சிம்மம் அமைந்துள்ளது.

குலசை ஆலயத்தில் மாத கடைசி வெள்ளிக் கிழமைகளில் பிரமாண்டமான விளக்கு பூஜை நடைபெறும். மாதந்தோறும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த பூஜையில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

விளக்கு பூஜையின் போது தரும் மாவை சாப்பிட்டால் எத்தகைய நோயும் குறிப்பாக வயிறு தொடர்பான நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. .சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திர தினத்தில் குலசை முத்தாரம்மன் கோவில் வருஷாபிஷேகம் நடைபெறும்.

kulasaifthh

ஒவ்வொரு மாதமும் கடைசி செவ்வாய்க்கிழமையன்று இரவு தேரோட்டம் நடத்தப்படுகிறது.தமிழ்நாட்டில் பொதுவாக சக்தி தலங்களில் கொடியேற்றம் நடை பெறாது. ஆனால் குலசை கோவிலில் கொடியேற்றம் நடத்தப்படுகிறது.

குலசை கோவிலில் விரதம் இருப்பவர்களில் சிலர் கடலில் குளித்து விட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அங்கபிரதட்சனமாகவே முத்தாரம்மன் கோவிலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டில் உள்ள எல்லா வகை இசைக் கருவிகளையும் குலசை தசரா திருவிழாவில் பார்க்க முடியும்.

kulasaithgf

குலசை கோயிலுக்கு சுமார் 800 க்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் வருகின்றன. சென்னை, மும்பையிலும் கூட குலசை தசரா குழுக்கள் உள்ளன. தசரா விழா கொடியேற்றம் நிகழ்ச்சிக்கே குலசையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வது குறிப்பிடத்தக்கது.தசரா குழுக்களில் அதிக செலவு செய்யும் குழுவாக தாண்டவன்காடு தசரா குழு கருதப்படுகிறது.

விஜயதசமியன்று நடக்கும் மகிஷாசூர வதம் நிகழ்ச்சி சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கும் அறம் வளர்த்த நாயகி கோயிலுக்கும் இடைப்பட்ட 3 கி.மீ. தூர கடற்கரையில் நடைபெறும்.சிவபெருமானிடம் முத்தாரம்மன் சூலம் வாங்கி சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வதாக வரலாறு உள்ளது. எனவே முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.

விஜயதசமி தினத்தன்று சரியாக இரவு 12 மணிக்கு மகிஷனை அம்பாள் சம்ஹாரம் செய்வாள். மகிஷனை வதம் செய்த பிறகு முத்தாரம்மன் தேரில் பவனி செல்வாள். தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி செல்வது இந்த தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.

kulffg

 சம்ஹார நாட்களில் முத்தாரம்மன் மிகவும் ஆவேசமாக காணப்படுவாள். எனவே 12-வது நாள் 108 பால்குடம் அபிஷேகம் செய்து அம்பாள் ஆவேசத்தை தணிப்பார்கள்.தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு 15 லட்சம் பக்தர்கள் வரை திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவராத்திரி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மண்டபத்தில் வைக்கப்படும் முத்தாரம்மன் உற்சவத்துக்கு 6 தடவை அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடத்தப்படும். பக்தர்கள் அதில் பங்கேற்று பலன் பெறலாம். 

அம்மை போட்டு குணம் அடைந்தவர்கள் குலசை முத்தாரம்மன் ஆலயத்துக்கு வந்து கப்பி முத்து எனப்படும் ஆமணக்கு முத்தை கிலோ கணக்கில் வாங்கி காணிக்கையாகக் கொடுக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்ட மக்கள் குலசை முத்தாரம்மனிடம் வேண்டிக் கொண்டு முட்டை, கோழி, மாடு, ஆடு போன்றவற்றை தானமாக கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். பக்தர்கள் கொடுக்கும் மாடுகளை பராமரிப்பதற்கு என்றே குலசையில் கோசாலை உள்ளது.

குலசையில் இந்துக்கள் தவிர கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களும் வசித்து வருகிறார்கள். முத்தாரம்மனுக்கு அவர்களும் காணிக்கை செலுத்துவதுண்டு. இது மும்மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக முத்தாரம்மன் அருள்பெற இளம் பெண்களும், காளி வேடம் போட தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

kulasihj

காளி வேடம் போடுபவர்களுக்கு கொலுசு,வளையல் மற்றும் மேக்கப் பொருட்களை வாங்கி தானமாக கொடுப்பதை தூத்துக்குடி மாவட்ட மக்கள் வேண்டுதலாக நிறைவேற்றுகிறார்கள்.

காளி வேடம் அணிந்து வருபவர்களை மதியம் வீட்டுக்கு அழைத்து சாப்பாடு கொடுத்து,புடவை எடுத்து கொடுப்பதை மிகச் சிறந்த நேர்ச்சையாக கருதுகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பகுதி மக்கள் தங்கள் வயலில் அறுவடை நடந்ததும் முதல் படி நெல்லை குலசை முத்தாரம்மனுக்கு கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

குலசை தசரா காரணமாக சென்னை,மதுரை, சேலம் உள்பட தமிழ்நாட்டில் உள்ள ஆடல், பாடல், நடன இசை கலைஞர்களுக்கு சுமார் ஒரு வாரம் பணி புரியும் வாய்ப்பும் கைநிறைய சம்பள பணமும் கிடைக்கிறது.தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு சுமார் 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. பாதுகாப்புப் பணிகளில் சுமார் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.