‘குற்றம் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்’ பிரியங்கா சோப்ரா #JusticeForJayarajandBennicks
தமிழகத்தின் தென் மாவட்டங்களுள் ஒன்றான தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளத்தில் கடை வைத்திருப்பவர் ஜெயராஜ். இவரின் மகன் பென்னிக்ஸ். ஜூன் மாதம் 19-ம் தேதி ஊரடங்கு நேரத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து கடைகள் திறக்கப்பட்டிருக்கின்றனவா என்று பார்க்கச் சென்றனர் காவல் துறையினர். ஜெயராஜின் கடை திறந்திருந்தது. அதுவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விடச் சில நிமிடங்களே ஆகியிருந்தது.
இதனை அடுத்து, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்போது உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிடுகிறது. இதனால் சிகிச்சைக்குச் சென்றாலும் அது பலன் அளிக்காமல் இருவரும் இறந்துவிடுகின்றனர். இருவரின் மரணத்துக்குக் காவல்துறையே காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து எதிர்கட்சிகள் பல குற்றசாட்டுகளைக் காவல் துறை மீது வைத்து வருகிறது.
சாத்தான் குள விவகாரம் தொடர்பாக சினிமா கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள், விளையாட்டுத் துறையினர் எனப் பல தரப்பினரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர். திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட் பக்கத்தில் தனது கண்டனத்தையும் அக்குடும்பத்தினருக்கான ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
பிரியங்கா சோப்ராவின் ட்விட்டின் சுருக்கமாக “இதைக் கேள்விப்பட்டதும் கோபத்திலும் சோகத்தில் ஒன்றும் புரியாமல் நின்றுவிட்டேன். வேறெந்த மனிதருக்கும் இதுபோன்ற கொடூரம் நடக்கக்கூடாது. இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாது இருந்தால் குற்றவுணர்ச்சி கொள்ளவேண்டு. இந்தக் குற்றம் தொடர்பாக உண்மைகளை கண்டறியப்பட வேண்டும். இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின் நிலையைக் கற்பனை செய்துபார்க்க முடியவில்லை. அவர்களுக்கு வலிமையைக் கிடைக்க பிரார்த்திக்கிறேன். இதற்கு ஆதரவான குரல்களை ஒன்றிணைக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#JusticeForJayarajandBennicks pic.twitter.com/vGi8m63If2
— PRIYANKA (@priyankachopra) June 26, 2020
இந்தப் பிரச்னை குறித்து பாடகி சுசித்ரா வெளியிட்டிருந்த வீடியோவையும் பிரியங்கா சோப்ரா தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.