குமுதம் நிருபரை அரிவாளால் வெட்டிய சம்பவம்: இரண்டு அதிமுக பிரமுகர்கள் கைது!
ராஜேந்திர பாலாஜியை வீழ்த்துவாரா ராஜவர்மன்?‘என்னும் தலைப்பில் கார்த்தி எழுதிய கட்டுரை பிரசுரமாகி இருந்தது.
குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி. நேற்று முன்தினம் வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்‘ராஜேந்திர பாலாஜியை வீழ்த்துவாரா ராஜவர்மன்?‘என்னும் தலைப்பில் கார்த்தி எழுதிய கட்டுரை பிரசுரமாகி இருந்தது.
அதில், வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் வாள் சுழற்றுகிறார் என்றும் ராஜவர்மன் அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என்றும் அந்த கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது.
இதன் காரணமாக இவரை மர்ம நபர்கள் சில பேர் சுற்றிவளைத்து சிவகாசி பெல் ஹோட்டல் முன்பாக ‘ஏன்டா நியூஸா போடுற?’என்று கேட்டவாறு இரும்பு கம்பியால் தாக்கினர். பின்னர் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதனால் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்த தப்பி ஓடிய கார்த்தி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, விருதுநகர் மற்றும் சென்னையில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதை தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த கு.முருகன் மற்றும் செல்லபாண்டி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.