குன்னூர் ஜெகதளா கிராமத்தில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழா!
குன்னுார் ஜெகதளா கிராமத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கலாச்சார சிறப்பு மிக்க விழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
நீலகிரி :
நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுக இனமக்கள் ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம் .
அதே போல் இந்த ஆண்டும் ஹெத்தையம்மன் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது . இந்த கலாச்சார சிறப்பு மிக்க பண்டிகை ஜெகதளா, காரக்கொரை, ஆகிய எட்டு கிராமங்களை சேர்ந்த மக்களால் 48 நாட்கள் விரதம் இருந்து கொண்டாடப்படுகிறது.
இதில் ஹெத்தைக்காரர்கள் என அழைக்கப்படும் பக்தர்கள், ஜெகதளா ஹெத்தையம்மன் கோயிலில் இருந்து, தும்மனாடா, பேரகல் கிராமங்கள் வழியாக, தாய்வீடாக அழைக்கப்படும் கொதுமுடி கோயிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறி ஆசி வழங்கினர்.
அதனை தொடர்ந்து எட்டு ஊர்களுக்கு சென்று வந்து தங்கிய பிறகு அம்மனுக்கு சிறப்பு வஸ்திரம் நெய்யப்பட்டது.
அதனையடுத்து நேற்று முன்தினம்,ஜெகதளா சென்று அடைந்தனர் . பண்டிகை நாளான நேற்று மடியோரை பகுதிக்கு அனைவரும் சென்று நதியில் இருந்து அம்மனுக்கு புதிய வஸ்திரம் சார்த்தி எட்டு கிராமங்களை சேர்ந்தவர்களும் ஹெத்தை தடி பாரம்பரிய வர்ண குடைகள் ஏந்தியவாறு அம்மனை எடுத்து வந்தனர்.
அதன் பின்னர் ஆடல் பாடல்களுடன் பக்தி பரவசத்துடன் வந்த இந்த ஊர்வலத்தின் போது பக்தர்கள் வெள்ளை துணியை தரையில் விரித்து அம்மனை வரவேற்றனர்.
அதன் பிறகு ஹெத்தையம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனைஅடுத்து விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.