குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்

 

குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்

குட்கா லஞ்ச வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது

சென்னை: குட்கா லஞ்ச வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை அருகே செங்குன்றத்தில் உள்ள மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் குட்கா விற்பனை செய்வதற்கு லஞ்சம் வாங்கிய முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் குறித்த ஆவணங்கள் மற்றும் மாதவராவ் எழுதிய ரகசிய டைரி ஒன்று சிக்கியது.

அதில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தற்போதைய தமிழக காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் மூத்த உயர் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட லஞ்சப் பணம் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய காவல்துறை உயரதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நடத்திய நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், குட்கா லஞ்ச வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதில், நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக காவல்துறை தலைவர் டி.கேராஜேந்திரன், சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரின் இல்லங்களில் கடந்த செப்டம்பர் மாதம் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.