குடியால் தொடரும் கொலைகள்… பணம் தர மறுத்த பெரியப்பாவை அடித்துக் கொன்ற இளைஞர்!

 

குடியால் தொடரும் கொலைகள்… பணம் தர மறுத்த பெரியப்பாவை அடித்துக் கொன்ற இளைஞர்!

தேனி மாவட்டத்தில் குடிப்பதற்கு பணம் தர மறுத்த பெரியப்பாவை அடித்துக் கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் சமதர்மபுரத்தைச் சேர்ந்தவர் பெத்தணசாமி (80). இவர் அதே பகுதியில் உள்ள தனது மகன் முறை உறவினரான சிவக்கண்ணுமூர்த்தி வீட்டில் தங்கியிருந்தார். சிவகண்ணுவின் தம்பி கனகவேல் அய்யப்பனும் (30) அங்குதான் வசித்து வந்துள்ளார். கனகவேல் அய்யப்பன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்துள்ளார். ஆனால் வேலை ஏதும் செய்யாமல் மது, கஞ்சா பழக்கத்துக்கு ஆளாகி ஊர் சுற்றி வந்துள்ளார். 

murder

தினமும் மது, கஞ்சா அடித்துவிட்டு பெரியப்பா பெத்தணசாமியுடன் வந்து தங்கிக்கொள்வார். அவர்கள் வீடு என்பதால் பெத்தணசாமியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. இந்த நிலையில், சம்பவத்தன்று முழு போதையில் இருந்த கனகவேல், குடிக்க பணம் கேட்டு பெத்தணசாமியிடம் தகராறு செய்துள்ளார். ஆனால், பெத்தணசாமி தன்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த கனகவேல், உருட்டுக்கட்டையை எடுத்துவந்து பெத்தணசாமியை அடித்துள்ளார். தலையில் அடித்ததில் பெத்தணசாமி தரையில் சாய்ந்துள்ளார். அவர் மீதே கனகவேலும் படுத்து தூங்கியுள்ளார்.

murder

காலையில் கனகவேல் கண்விழித்துப் பார்த்தபோது பெத்தணசாமி பேச்சு மூச்சு இன்றி கிடந்துள்ளார். முந்தைய நாள் நடந்த சம்பவம் அவர் நினைவுக்கு வரவே, நேராக தேனி காவல் நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவத்தை கூறி பெரியப்பாவை கொலை செய்துவிட்டதாக கனகவேல் சரண் அடைந்தார். ஆனால், குடிகாரன் போதையில் உளறுகிறான் என்று நினைத்த போலீசார், அவரை விரட்டியுள்ளனர். 
பிறகு மீண்டும் ரத்தக்கறை படிந்த ஆடையுடன் சென்று சொல்லியிருக்கிறார் கனகவேல். அதன்பிறகே போலீசாருக்கு அனைத்தும் உண்மை என்பது புரிந்தது. வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தபோது, பெத்தணசாமி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளனர். அவருக்கு உயிர் இருந்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கனகவேல் அய்யப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.