குடிச்சுட்டு வண்டி ஓட்டுனா என்ன நடக்கும் தெரியுமா? போலீசார் புது டெக்னிக்!!!
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ஹைதராபாத் போலீசார் புது டெக்னிக் ஒன்றை கையாண்டு வருகிறார்கள்
ஹைதராபாத்: மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ஹைதராபாத் போலீசார் புது டெக்னிக் ஒன்றை கையாண்டு வருகிறார்கள்.
மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது என எவ்வளவு விழிப்புணர்வுகள் மேற்கொண்டாலும், அதனை பொருட்படுத்தாமல் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சோதனையின் போது அவர்களை கண்டறியும் போலீசார், அவர்களுக்கு அபராதத் தொகையை விதிக்கின்றனர். அல்லது தங்கள் பையை நிரப்பிக் கொண்டு அவர்களை விட்டு விடுகின்றனர்.
வேறெங்கும் இல்லாத கூத்தாக, நம்மூரில் மட்டும் மதுபானக் கடைகளை அரசே ஏற்று நடத்துகிறது. அங்கு போய் சரக்கு அடிக்கும் குடிமகன்களை, அரசே காவல்துறை மூலம் வளைத்துப் பிடித்து அவர்களுக்கு அபராதம் விதித்து, கஜானாவை இருவகைகளில் நிரப்பி வருகிறது.
“என்னப்பா!!கவர்மென்ட்டே சாராய கட நடத்துது. அங்கயும் பாட்டில்ல இருக்குற விலையை விட கூட காசு குடுத்து தான் வாங்க வேண்டியிருக்கு..என்னன்னு கேட்ட சரக்கு குடுக்க மாட்றாங்க..சரின்னு குடிச்சுட்டு வெளிய வந்தா போலீஸ் புடிச்சுகிறாங்க…ஒன்னு அவங்க விக்குறத நிறுத்தனும், இல்ல இவங்க புடிக்கிறதா நிறுத்தனும்!!இப்படி அங்க குடிக்க வச்சு இங்க புடிச்சா என்ன பண்றது எவ்வளவு காசு தான் குடுக்கிறதுன்னு” வெளிப்படையாக புலம்பும் குடிமகன்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
இந்நிலையில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ஹைதராபாத் போலீசார் புது டெக்னிக் ஒன்றை கையாண்டு வருகிறார்கள். அதன்படி, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் பிடிபட்டால், அவர்கள் பிடிபட்ட இடம், அவர்களின் பெயர், நேரம், பிடிபட்ட தேதி முதலான விபரங்களை பிடிபட்டவர் பணிபுரியும் அலுவலகத்தின் ஹெச்.ஆர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்.
அதேசமயம், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பயமுறுத்தவோ, அவர்களின் அலுவலகத்துக்கு போட்டுக் கொடுக்கும் நடவடிக்கையோ இது இல்லை என தெரிவித்துள்ள போலீசார், இது ஒருவிதமான விழிப்புணர்வு என தெரிவித்துள்ளனர். போட்டுக் கொடுக்கிறதுக்கு பெயர் விழிப்புணர்வுன்னும் வச்சுக்கலாம் போல!!