குடிக்கக் காசு தராததால் அம்மா, அப்பாவை வெட்டிக் கொன்ற மகன்.. போதையில் நடந்த வெறிச்செயல்!

 

குடிக்கக் காசு தராததால் அம்மா, அப்பாவை வெட்டிக் கொன்ற மகன்.. போதையில் நடந்த வெறிச்செயல்!

கோவையில் குடிக்கக் காசு தராத பெற்றோரை மகன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுபோதை பழக்கம் இளைஞர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக இவர்கள் குடித்து விட்டுச் செய்யும் அட்டூழியங்கள் சொல்லித் தீராது. தாய், தந்தையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலை மாறி இப்போதெல்லாம் குடிப்பதற்கு அவர்களிடம் காசு கேட்டு, அவர்களையே அடிக்கும் பல குடிமகன்களையும், குடித்து விட்டு அவர்கள் செய்யும் வெறிச்செயலையும் பார்த்திருக்கிறோம். இதே போல, கோவையில் குடிக்கக் காசு தராத பெற்றோரை மகன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

கோவையை அடுத்த வெள்ளிமலை பட்டினம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி. கடந்த சில ஆண்டுகளாக மது போதைக்கு ஆளான இவர், அடிக்கடி பெற்றோரிடம் காசு கேட்டு மிரட்டுவாராம். காசு கொடுக்கவில்லை என்றால் அவர்களை அடிப்பாராம். இந்நிலையில், நேற்று கார்த்தி மது வாங்குவதற்காக அவரது பெற்றோரிடம் காசு கேட்டுள்ளார். அப்போது அவர்கள் பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்து வீட்டிலிருந்து வெளியே சென்ற கார்த்தி, இன்று காலை குடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அதன் பின் தூங்கிக் கொண்டிருந்த சுந்தரம் மற்றும் துளசியை வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

ttn

 சத்தம் கேட்டுச் சென்ற அக்கம் பக்கத்தினர், அவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே அங்கு சென்ற போலீசார்  சுந்தரம் மற்றும் துளசியின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் கார்த்தியைத் தேடி வருகின்றனர்.