கிண்டி வட்டாட்சியர் அலுவலக கார் டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து – ஓட்டுநர் பலி
கிண்டி வட்டாட்சியர் அலுவலக கார் டிரான்ஸ்பார்மரில் மோதிய விபத்தில் அந்தக் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
சென்னை: கிண்டி வட்டாட்சியர் அலுவலக கார் டிரான்ஸ்பார்மரில் மோதிய விபத்தில் அந்தக் காரை ஓட்டி வந்த ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மாடம்பாக்கம் அம்பிகா நகரில் வசித்து வரும் ராம்குமார் என்பவர் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இன்று அவரை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வதற்காக அசோக் நகரைச் சேர்ந்த தனியார் கார் ஓட்டுநர் சந்தீப் என்பவர் வந்தார். இவர்கள் பயணித்த காரானது மாடம்பாக்கம் சாலையிலிருந்து ராஜகீழ்ப்பாக்கம் சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. இந்நிலையில் வேகமாக சென்ற கார் அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தாசில்தார் ராம்குமார் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் பலத்த காயமடைந்த ஓட்டுனர் சந்தீப்பை 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அங்கிருந்தவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக சந்தீப்பை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உடற்கூறாய்வுக்காக மருத்துவர்கள் அனுப்பினர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக சேலையூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.