கிணற்றில் மூழ்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு!
ராணிபேட்டை
ராணிப்பேட்டை அருகே கிணற்றில் நீச்சல் பழகியபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி 9 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது மகன் காமேஷ் (9). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், செவ்வாய் கிழமை மாலை கோபி, சிறுவன் காமேஷை அங்குள்ள விவசாய கிணற்றுக்கு நீச்சல் பழக அழைத்துச் சென்றார்.
சுமார் 70 அடி ஆழ கிணற்றில் இறங்கி பயிற்சி எடுத்தபோது எதிர்பாராத விதமாக காமேஷ் நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோபி, ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் இறங்கி சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1.30 மணிநேர தேடலுக்கு பின், அவர்கள் சிறுவனை சடலமாக மீட்டனர்.
இதனை தொடர்ந்து, போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.