காலத்தால் பிரிந்த தம்பதி: 72 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நெகிழ்ச்சி சம்பவம்!
கேரளாவில் முதியவர் ஒருவர் 72 ஆண்டுகள் பிரிவுக்குப் பின்னர் மீண்டும் தன் முதல் மனைவியைச் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
கேரளா: கேரளாவில் முதியவர் ஒருவர் 72 ஆண்டுகள் பிரிவுக்குப் பின்னர் மீண்டும் தன் முதல் மனைவியைச் சந்தித்த நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
கடந்த 1946-ம் ஆண்டு 14 வயது சாரதா அவரது முறைமாமன் நாராயணனை (18 ) குடும்பத்தார் நிச்சயித்தபடி திருமணம் முடித்தார். ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே அன்றைய கேரளாவில் கவும்பயி விவசாயப் போராட்டம் நடந்துள்ளது. இந்த போராட்டம் வன்முறையாக வெடிக்கப் பல விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
இதன் காரணமாக திருமணமான சில மாதங்களிலேயே நாராயணன் பிரிட்டிஷ் போலீஸாரால் கைது செய்யப்பட்டு கேரளாவிலிருந்து அழைத்து வரப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். நாராயணனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
அதன் பின்னர் மாமியார் உதவியால் அன்றைய பிரிட்டிஷ் போலீஸாரிடமிருந்து தப்பித்துப் பிறந்த வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார் சாரதா. இந்தக் காலகட்டத்தில் 14 வயது சிறுமி சாரதாவின் கணவன் மற்றும் கணவன் வீட்டார் என்ன ஆனார்கள் ? என்றே தெரியாமல் தவித்துக்கிடந்த சாரதா குடும்பம் சில வருடங்களுக்குப் பிறகு அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தனர்.
1954-ம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் விடுதலைப் பெற்ற நாராயணன், குடும்பம் சிதறிப் போனதைத் தெரிந்து கொண்டுள்ளார். நாளடைவில் நாராயணனும் மறு திருமணம் செய்துகொண்டார். சாரதா- நாராயணன் தம்பதியர் பிரிந்து இருவரும் அவரவர் வாழ்வில் மறுமணம் செய்துகொண்டு பிள்ளைகள் பெற்று 72 ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர்.
இந்த சூழலில் சாரதாவின் இயற்கை விவசாயியான மகன் பார்கவன் எதேர்ச்சையாக தன்னுடைய தாயின் முதல் கணவரான நாராயணனின் குடும்பத்தாரைச் சந்தித்துள்ளார். குடும்பங்கள் சிதறிய கதையை அறிந்த இரு வீட்டுப் பிள்ளைகளும் சாராதா- நாராயணனை சந்திக்க ஏற்பாடு செய்தனர்.
அதன்படி, பிள்ளைகளின் முயற்சியால் 90 வயது நாராயணன் தனது முதல் மனைவியான 86 வயது சாரதாவைச் சந்தித்தார். 72 ஆண்டுகளுக்குப் பிரிந்த தம்பதியர் சந்தித்த போது இருவரும் இடையில் அமைதி மட்டுமே இருந்தது. சாராதாவின் தலையை வருடிக் கொடுத்த நாராயணன், ‘இந்தப் பிரிவுக்கு நாங்கள் இருவரும் காரணமல்ல. இனி ஒரு குடும்ப நண்பராக சாராதா மற்றும் அவரது குடும்பத்தாரை என் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துள்ளேன்’ என்று உருக்கமாக கூறியுள்ளார்.