காலணியை கழற்ற சொன்ன விவகாரம்! திண்டுக்கல் சீனிவாசனுக்கு பழங்குடியினர் நல ஆணையம்  நோட்டீஸ்

 

காலணியை கழற்ற சொன்ன விவகாரம்! திண்டுக்கல் சீனிவாசனுக்கு பழங்குடியினர் நல ஆணையம்  நோட்டீஸ்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை அழைத்து காலணியை கழற்ற சொன்ன விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் பதிலளிக்க பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகள் புத்துணர்வு முகாமை  தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றிருந்தார். அங்கு புல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த திண்டுக்கல்  சீனிவாசன் செருப்பு புல்வெளியில் மாட்டிக்கொண்டது. அப்போது அங்கிருந்த பழங்குடியின சிறுவனை சீனிவாசன், டேய்  வாடா வாடா செருப்பை கழற்றிவிடுடா என்று கூறினார். உடனே அங்கிருந்த சிறுவன் ஒருவன், அவருடைய செருப்பை கழற்றிவிடக்கூடிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி கடும் கண்டனங்களை ஏற்படுத்தியது.

dindigul srinivasan

இதுகுறித்து விளக்கமளித்த திண்டுக்கல் சீனிவாசன், ‘சிறுவனை செருப்பை கழற்ற சொன்னதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை. பெரியவர்களை அழைத்தால் தவறாகிவிடும் என்பதால் தான்  பேரன் போல  நினைத்து தான் அவ்வாறு செய்ய சொன்னேன். இருப்பினும் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பழங்குடியின  சிறுவன் கேத்தன் தெப்பகாடு பகுதி மக்களுடன் சென்று மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்நிலையில்  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறுவனை அழைத்து காலணியை கழற்ற சொன்ன விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் பதிலளிக்க பழங்குடியினர் நல ஆணையம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.