கார்த்திகை தீபத்திருவிழாவின் 3-ம் நாள் விழா: பூத வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

 

கார்த்திகை தீபத்திருவிழாவின் 3-ம் நாள் விழா: பூத வாகனத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், பூத வாகனத்தில் சந்திரசேகரரும் வீதி உலா வந்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

thiruvannamali

அன்றைய தினம் காலையிலும், மாலையிலும் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. நேற்று முன்தினம் முதல் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதிஉலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெறுகிறது. 

3-ம் நாள் விழாவான நேற்று காலை 10.30 மணியளவில் விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் பூத வாகனத்திலும் அருணாசலேஸ்வரர் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. 

siva

கோயிலில் பகல் 12 மணியளவில் சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோயிலில் சங்குகளில் புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு யாக சாலை பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன்பின்னே பூத வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர்.மேலும் கோயில் கலையரங்கத்தில் பரதநாட்டியம், பக்தி இன்னிசை கச்சேரிகள் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

nanthi

இரவு 10 மணியளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன்,சண்டிகேஸ்வரர் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் கோயில் மாடவீதிகளை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.