காய்கறி வியாபாரிக்கு கொரோனா : இடம் மாற்றப்பட்ட திருவான்மியூர் சந்தை
ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு தளர்வுகள் அந்தந்த மாநிலங்களை பொறுத்து மாறுபடும் என்று அறிவிக்கபட்டது.
கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 4 முதல் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு தளர்வுகள் அந்தந்த மாநிலங்களை பொறுத்து மாறுபடும் என்று அறிவிக்கபட்டது.
தமிழகத்தை பொறுத்தவரையில் மேலும் 266பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 3023ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வு அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், ” திருவான்மியூர் காய்கறி சந்தையில் ஒரு காய்கறி வியாபாரிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த சந்தை மூடப்பட்டு அப்பகுதியில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அங்குள்ள வியாபாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் அமைக்கப்பட்ட சந்தை அங்கிருந்து வாகன நிறுத்தம், வடக்கு மாட வீதி மற்றும் கிழக்கு மாட வீதி என மூன்று பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது. அப்பகுதியில் மேலும் சில இடங்களை கண்டறிந்து அங்கே சந்தை விரிவாக்கம் செய்யப்பட்டு மே 6 புதன்கிழமை முதல் அவை செயல்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.