காதல் விவகாரம்: ஓடிய கால்கள் இதுதானே என்று கேட்டு காலை வெட்டிய கொடூரம்!

 

காதல் விவகாரம்: ஓடிய கால்கள் இதுதானே என்று கேட்டு காலை வெட்டிய கொடூரம்!

நாகர்கோவில் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடியின் காரை மறித்து நாம் தமிழர் கட்சியினர் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடியின் காரை மறித்து நாம் தமிழர் கட்சியினர் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் உசரவிளை பெருமாள்புரத்தை சேர்ந்த  ஸ்டாரின் என்பவர் அப்பகுதியில் பெயிண்டராக உள்ளார்.  இவர் அதே பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயபாலின்  மகளும்  மென்பொறியாளருமான டிக்சோனாவை காதலித்துள்ளார்.

இவர்களது காதலுக்கு  டிக்சோனாவின் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்க  ஸ்டாரினும், டிக்சோனாவும் கடந்த 10 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பெற்றோரால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று உணர்ந்த அவர்கள்  பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைவதற்காக, நேற்று மாலை கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு காரில் சென்றுள்ளனர்.

காவல் நிலையம் செல்லும் வழியில் காரின் முன் பக்க கண்ணாடியில் எங்கிருந்தோ வந்து கல் ஒன்று விழுந்ததால் கார் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த சில நொடிகளில் டிக்சோனாவின் தந்தை ஜெயபால் நாம் தமிழர் கட்சியினருடன் அங்கு வந்து  காரை வழி மறித்து தாக்கத் தொடங்கி உள்ளார்.

தனது பெண்ணை கூட்டிக்கொண்டு ஓடிய கால்கள் இதுதானே என்று கேட்டு காதலன் ஸ்டாரினின் இரு கால்களையும் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.  இதில் படுகாயமடைந்த ஸ்டாரின் ரத்தவெள்ளத்தில் விழுந்துள்ளார். இது மட்டுமின்றி காரில் இருந்த அனைவரையும் அடித்து உதைத்து விட்டு டிக்சோனாவை தங்கள் காரில் ஏற்றி அழைத்து சென்று விட்டனர். இதையடுத்து  காயம் அடைந்தவர்கள் தனியார் எலும்பு மூட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தாக்குதலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறையினரிடம் ஸ்டாரினின் உறவினர்கள் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.