காதல் விவகாரத்தால் உயிருடன் எரிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்: அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்!
பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அவரை பிடித்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
உத்தரப் பிரதேசம்: பட்டியலின இளைஞர் எரித்து கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹார்டோய் மாவட்டத்தின் பாதேசா பகுதியைச் சேர்ந்தவர் மோனு என்ற அபிஷேக். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பழகிவந்துள்ளார்.
இந்நிலையில் அபிஷேக் காதலியை பார்க்கச் சென்ற போது பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் அவரை பிடித்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். மேலும் அவரை உயிருடன் எரித்துக் கொல்ல முயன்றுள்ளனர். இதனால் அபிஷேக் கதறியுள்ளனர். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள் அபிஷேக்கை மீட்டு லக்னோ மருத்துவமனையில் அனுமதித்தனர். தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். இதில் மேலும் பரிதாபத்திற்குரிய விஷயம் என்னவென்றால், மகனின் நிலையைக் கேள்விப்பட்டு அபிஷேக்கின் தாய் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் பக்கத்து வீட்டார் இருவர் உள்பட 5 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.