காதல் திருமணம் செய்த மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை!
காதல்… மொழி, இனம், வயது, வசதி எல்லாம் பார்த்து வருவதல்ல என்பது சமூகத்தில் அவ்வப்போது நிரூபணமாகிக் கொண்டு வந்தாலும், பெற்றோர்கள் சமூக அந்தஸ்தையும், சாதியையும் காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பவங்களும் இன்னொரு பக்கம் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது
காதல்… மொழி, இனம், வயது, வசதி எல்லாம் பார்த்து வருவதல்ல என்பது சமூகத்தில் அவ்வப்போது நிரூபணமாகிக் கொண்டு வந்தாலும், பெற்றோர்கள் சமூக அந்தஸ்தையும், சாதியையும் காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பவங்களும் இன்னொரு பக்கம் தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில், காதலனே முக்கியம் என்று வீட்டை விட்டு வெளியேறி, காவல் நிலையத்தில் தஞ்சமான தனது மகளுக்கு வேலூர் மாவட்டம் ஆம்பூரில், ‘கண்ணீர் அஞ்சலி’ பேனர் வைத்திருக்கிறார் ஒரு தந்தை. அவரது செயல் அந்த பகுதியையே பரபரப்பாக்கியிருக்கிறது.
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த குப்பராஜ பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் சரவணன் மற்றும் யுவராணி. பால் வியாபாரம் செய்து வந்த இவர்களுக்கு 21 வயதில் ஒருமகள் இருக்கிறார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார்.
சரவணன் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தன் மகளின் காதலுக்கு தந்தை சரவணன் எதிர்ப்பு தெரிவித்தார். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலனுடன் அந்த இளம் பெண் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரால் தனக்கும், தனது காதல் கணவருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும், எனவே தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் இளம் பெண் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து, சரவணன், யுவராணி ஆகியோரை போலீசார் பேச்சு வார்த்தைக்கு அழைத்து பேசியுள்ளனர். ஏற்கெனவே மகளின் காதல் விவகாரத்தினால் அதிர்ச்சியடைந்திருந்த சரவணனுக்கு, மகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது இன்னும் கோபத்தை வரவழைத்தது. மகள் மீது இருந்த கோபம் தீராத சரவணன், ‘தனது மகள் இறந்துவிட்டாள்’ என்று கூறி காவல் நிலையத்தை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில், தனது மகள் இறந்து விட்டார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஊர் முழுவதும் சரவணன், மகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனரை வைத்துள்ளார்.