காதலியை கடத்தி பாலியல் வன்கொடுமை: ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்ற போது விபரீதம்

 

காதலியை கடத்தி  பாலியல் வன்கொடுமை: ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்ற போது விபரீதம்

சுற்றுலா சென்ற போது, காதலனை தாக்கி அவரது காதலியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகர சம்பவம் ஏற்காட்டில் அரங்கேறியுள்ளது

சேலம்: சுற்றுலா சென்ற போது, காதலனை தாக்கி அவரது காதலியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிகர சம்பவம் ஏற்காட்டில் அரங்கேறியுள்ளது.

ஈரோட்டை சேர்ந்த வாசுதேவன் என்பவர் தனது காதலியுடன் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். இருவரும் அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது சண்டையில் முடிந்துள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த காதலி விடுதியில் இருந்து வெளியேறியுள்ளார். அவரை தேடி வாசுதேவனும் பின்னாலேயே வந்துள்ளார். இதனை கவனித்துக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் மற்றும் கார் ஓட்டுநர் என இருவர், வாசுதேவனை தாக்கி அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும், அவரது காதலியை பின் தொடர்ந்து சென்று அவரை சேலத்தில் இறக்கி விடுவதாக கூறி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கடத்தி சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதுகுறித்து வாசுதேவன், ஏற்காடு காவல் நிலையத்திலும், வாசுதேவனின் காதலி கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநர் விஜயக்குமார் மற்றும் கார் ஓட்டுநர் ஆரோக்கியதாஸ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.