காதலித்த மகளை கொன்று விட்டு பெற்றோரும் தூக்கில் தொங்கிய கொடூரம்: சேலத்தில் பரபரப்பு!
வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்ததால் மகளைக் கொன்று விட்டு தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் : வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்ததால் மகளைக் கொன்று விட்டு தாயும் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகே உள்ள ஆற்றுக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் – சாந்தி தம்பதியினருக்கு ரம்யா லோச்சணி என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இதில் ரம்யா லோச்சணி திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா கல்லூரியிலும், மகன் பனிரெண்டாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.
தூக்கில் தொங்கிய கொடூரம்
இந்நிலையில், ராஜ் குமார், மகனை நேற்று மாலை தனது தாயின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.இதையடுத்து சிறுவன் மறுநாள் காலை தனது வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். வீடு பூட்டியிருந்துள்ளது. இதனால் சிறுவன் ஜன்னல் வழியாகப் பார்க்க, தாய், தந்தை, அக்கா ஆகிய மூவரும் பிணமாக தூக்கில் தொங்கியுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுவன் கூச்சலிட்டுள்ளார்.இதனால் அங்கு கூடிய அப்பகுதி வாசிகள் சம்பவம் குறித்து உடனடியாக கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தகவலில் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூன்று சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாதியால் நடந்த அவலம்
இவ்விவகாரம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ராஜ்குமாரின் மகள் ரம்யா லோச்சணி வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்துள்ளார். இது ரம்யாவின் பெற்றோருக்குத் தெரியவர மகளின் காதலுக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனால் ரம்யா தனது காதலைக் கைவிட மறுத்ததால், அவர்கள் வீட்டில் தொடர்ந்து சண்டை நடந்து வந்துள்ளது.
இதனால் சம்பவத்தன்று மகளிடம் பேசி சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கிய பெற்றோருக்கு ஏமாற்றம் மிஞ்சியதால், மகளை கொலை செய்து விட்டுப் பெற்றோரும் தூக்கில் தொங்கி இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கதறி அழுத சிறுவன்
இருப்பினும் இச்சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜ்குமார் – சாந்தி தம்பதியினர், மகனுக்காக இரண்டாயிரம் ரூபாய், சொத்து பத்திரம் முதலிவற்றை எடுத்து வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதைக் கண்ட அந்த சிறுவனும், உறவினர்களும் கதறி அழுததால் அப்பகுதி சோகமுமாகியுள்ளது.
இதையும் வாசிக்க: அசிங்கங்களையும் அவலங்களையும் போற்றுவது தான் தரமா? சூப்பர் டீலக்ஸ் படத்தை கடுமையாக சாடிய பிரபல நடிகர்!